பரண் – 0007 :-

தரப்படுத்தலின் அதிகாரமும் நசுக்கப்படும் கிளைமொழிகளும்

                                                                                 -    மு.சிவகுருநாதன்

(வட்டார வழக்கில் எழுதப்படுகிற படைப்புகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பாடமாக வைக்க மறுத்து வருகின்றன. அப்படி பாடமாக வைக்கப்பட்டாலும் பின்னாட்களில் எதிர்ப்பு வருகின்றது என்கிற பெயரில் அவைகள் நீக்கப்படுகின்றன. தொன்னூறுகளின் இறுதியில் சோலை சுந்தரபெருமாளின் ‘ஒரே ஒரு ஊர்ல…’ என்ற நாவல் ஒர் கல்லூரிப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதையொட்டி இக்கடிதம் தினமணிக்கு எழுதப்பட்டது. ஆனால் தினமணி வெளியிடவில்லை. பிறகு ‘கேப்பியார்’ இதழில் வெளிவந்தது. (இதழ் வருடம், மாதம் சரியாக நினைவில்லை.) இக்கட்டுரையில் அ.மார்க்ஸ் – ன் பாதிப்பு நிறையவே இருக்கும். பிறகு சோலையின் ‘செந்நெல்’ நாவல் பாடமாக்கப்பட்டபோதும் இதேமாதிரியான எதிர்ப்பு உண்டானது.  தொன்னூறுகளின் இறுதியில் வெளிவந்த இக்கட்டுரை பரண் பகுதியில் வெளியாகிறது. ‘கேப்பியார்’ இதழுக்கும் அதன் ஆசிரியர் கே.புஷ்பராஜ் –க்கும் எனது நன்றிகள்.)

      தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்பல்கலைக்கழகம், அவ்வப்போது ஆர்ப்பாட்டமாக நடந்தேறும் தமிழ் மாநாடுகள் போன்றவற்றின் வரிசையில் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுத்துறையின் மூலம் தமிழை வளர்த்தெடுக்கக் கிளம்பியிருக்கிறது அரசு. பெயர்ப்பலகைகளை தமிழில் எழுதவேண்டும் என்ற கோஷம் மேலெழும்புகிறது. தமிழை செந்தரப்படுத்தி (standardised) தனித்தமிழில் ஆக்கங்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

   மொழி, பண்பாடு போன்றவற்றைப் பேசுகிறபோது எந்த-யாருடைய மொழி, பண்பாடு என்ற கேள்வி எழும். அப்படி கட்டமைக்கப்படுகிற மொழியும் பண்பாடும் தமிழர்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்குமா? இந்தக் கட்டமைப்பில் உள்ளிருப்போர் யார் வெளியேற்றப்படுபவர்கள் யார் என்றெல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

    மொழியின் இடுகுறித்தன்மை, நவீனத்துவ – பின் நவீனத்துவ சிந்தனைகள் போன்றவற்றின் வெளிச்சத்தில் இதுபற்றி மேலும் சிந்திக்கவேண்டியிருக்கிறது.

    கருவியாகிய மொழி பேச்சு மரபையும் (oral tradition) எழுத்து மரபையும் (literate tradition)  உள்ளடக்கியது. இதில் இலக்கியம் எந்த வடிவத்தில் இருக்கவேண்டுமென மூன்றாம் உலக நாடுகளின் சிந்தனைகள் விவாதங்களாக உருவெடுத்து எழுத்துமரபை மறுதளித்து பேச்சு மரபின் முக்கியத்துவத்தையும் மாற்றுக்கல்வி என்று வருகிறபோது வட்டாரமொழியினால் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தை அவ்வட்டார மொழி பேசுகின்ற ஆசிரியரால் நடத்தப்படவேண்டுமென்பது தொடர்ந்து பேசப்பட்டு வந்திருக்கிறது.

    தமிழ்ச் சூழலில் தமிழிலக்கிய, பண்பாட்டு வரலாறு என்பது உரையாசிரியர்களின் வரலாறாக நீண்டிருக்கிறது.

   தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள செந்தமிழ் வரையறைகளும் இழிசனர் வழக்கு என்று கட்டம் கட்டியதும் அடித்தட்டு (subaltern) மக்களின் பேச்சுமொழியையும் அவர்களது பண்பாட்டையும் அழித்தொழித்து மேட்டுக்குடிப் (elite) பண்பாட்டை நிலைநிறுத்தி பொதுமைப்படுத்தி அதிகாரத்தைக் கட்டமைத்த வேலையைத்தான் இன்றும் அரசுகள் செய்கிறது. கொடுந்தமிழ் என்ற சொல்லாக்கம் தொல்காப்பியத்தில் கூறப்படவில்லையாயினும் திசைச்சொல்லை கொடுந்தமிழாக்கி அதன் மூலம் விளிம்புநிலை மக்களின் பேச்சுமொழியை அழித்தொழித்து சைவப்பண்பட்டை மொழியை அதிகாரத்தில் ஏற்றிவைத்ததில் உரைகாரர்களின் பங்கு கணிசமானது.

   இன்று யாருடைய தமிழை தனித்தமிழாக்கி செந்தரப்படுத்தும் வேலை நடக்கிறது? பலகுரல் தன்மையை (plurality) மறுத்து ஒரே குரலாய் முழுமுதற்பார்வையைத் (totality) தரும் பெருங்கதையாடல் (meta narratives) சமாச்சாரங்கள் அனைத்தும் அதிகாரத்துவத்திற்கும் பாசிசத்திற்குந்தான் இட்டுச்செல்லும் என்பதை மறுக்கமுடியாது. தலித் தமிழ், கொங்குத்தமிழ், நாஞ்சில் தமிழ், தஞ்சைத் தமிழ், சென்னைத் தமிழ், மலைத் தமிழ் போன்று வட்டாரத்திற்கொன்றாக இருக்கும் தமிழ்களைப் புறக்கணித்து தனித் தமிழை பொதுத் தமிழாக கட்டமைக்க முயல்வது எவ்வளவு பெரிய வன்முறை?

   பின் நவீனத்துவம் பகுத்தறிவின் வன்முறை பற்றிப் பேசுகிறது. தரப்படுத்துதல், தூய்மைபடுத்துதல் போன்ற பெயரில் மொழியின் தொடுக்கப்படும் வன்முறை குறித்தும் இதனால் நசுக்கப்படும் கிளை மொழிகள் மற்றும் அடித்தட்டு மக்களின் பண்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது. வட்டார மொழியில் எழுதப்படும் கவிதை, சிறுகதை, நாவல் போன்றவைகள் கொச்சை என்று ஒதுக்கப்படுவதும் மு.வ. போன்றவர்கள் சிறந்த நாவலாசிரியர்கள் போற்றப்படுவதும் தமிழின் அவலம்.

   வட்டார மொழி வாக்கியங்களைக் கொடுத்து கொச்சைகளைத் திருத்தி எழுது என்று தமிழில் இன்னமும் கேள்வி கேட்டு வருகிறோம். ஆனால் பல்கலைக்கழகங்களில் ‘நாட்டார் வழக்காற்றியல்’ என்ற துறை வேறு. தமிழாசிரியர்களும் தமிழ்ப் பேராசிரியர்களும் சைவக் கறை படிந்த இந்த தனித்தமிழை – பொதுத் தமிழை உயர்த்திப் பிடிப்பதிலும் மொழி, பண்பாடு இவற்றின் பன்மைத்தன்மையை மறுப்பதிலும் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

   இதற்கு நமது கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அளிக்கும் தமிழ்ப்பட்டங்கள் – பாடத்திட்டங்கள் போன்றவையே காரணமாகும். இவைகள்  ‘’நம் இலக்கியம் சாதி காப்பாற்றும் இலக்கியம்; நம் மொழி சாதி காப்பாற்றும் மொழி.’’ என்ற பெரியாரின் சிந்தனையின் பால் முகம் காட்டாது தொடர்ந்து மதவாதிகளாக – இந்துத்துவவாதிகளாக   தமிழ்ப் பட்டதாரிகளை உருவாக்கிக் கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

  இனக்குழுக்களின் வட்டார மொழிகளையும் பண்பாடுகளையும் அழித்தொழித்து பொது மொழியையும் பண்பாட்டையும் கட்டமைப்பதானது பேரினவாத ஒடுக்குமுறையாகவே இனங்காணப்படும். வட்டார வழக்குகளும் அதன் இலக்கியங்களும் பண்பாட்டுக் கூறுகளும் அதனதன் வழியிலேயே ஏற்றுக்கொண்டு அதன் பன்மைத் தன்மையை அங்கீகரிப்பதே பொருத்தமாக இருக்கமுடியும்.

    தேசிய அடையாளம் போல செந்தரப்படுத்தப்பட்ட தனித்தமிழ் அடையாளமும் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். பொதுத் தமிழின் அதிகாரத்துடனும் பண்பாட்டுப் பாசிசத்துடனும் வட்டார மொழி வழக்காறுகளும் அடித்தட்டு மக்களும் தொடர்ந்து போரிட வேண்டிவரும்.

  இறுதியாக, அரசுக் கருத்துருவச் செயல்பாடு மற்றும் நிறுவனமயமாக்கல் ஆகியவற்றின் மூலமாக மொழியை வளர்த்தெடுக்க முயல்வது அவலை நினைத்து உரலை இடிப்பது போலாகும்.

நன்றி:- கேப்பியார் இதழ்

Share:
  • Add to favorites
  • email
  • Facebook
  • Google Bookmarks
  • Google Buzz
  • PDF
  • Twitter
  • Yahoo! Buzz

பரண்-0006:- அ.மா.வின் சுபமங்களா நேர்காணல் எதிர்வினைக்கான பதில் 

 

                                               -மு.சிவகுருநாதன்

இடமிருந்து அப்துல் காதர்,அ.மார்க்ஸ்,மு.சிவகுருநாதன்,பா.ரவிக்குமார்,த.பிரிட்டோ

1995 இல் அ.மா.வின் நேர்காணலை சுபமங்களாவிற்காக கும்பகோணத்தில் த.பிரிட்டோ, மணலி அப்துல் காதர், லிங்கம், திருத்துறைப்பூண்டி ரவிக்குமார், மு.சிவகுருநாதன் ஆகிய நாங்கள் பதிவு செய்தோம். இதை த.பிரிட்டோ தொகுத்து எழுதினார். பின்னர் அ.மா.விடம் காட்டி திருத்தம் செய்து நேர்காணல் இறுதி வடிவம் பெற்றது. இந்த நேர்காணல் சுபமங்களா ஜூலை-1995 இதழில் வெளியானது. த.பிரிட்டோ, மணலி அப்துல் காதர், மு.சிவகுருநாதன் ஆகிய மூன்று பெயர்களுடன் இந்நேர்காணல் வெளியிடப்பட்டது.

ஓடை.பொ.துரையரசன் தொகுத்து பயணி வெளியீடாக வந்திருக்கும் அ.மா. நேர்காணல் தொகுப்பில் இந்நேர்காணல் இடம்பெற்றுள்ளது. த.பிரிட்டோ, மணலி அப்துல் காதர், லிங்கம் ஆகிய பெயர்களில் இந்நேர்காணல் வெளியாகியுள்ளது.

இந்த நேர்காணல் குறித்து அப்போதைய காலச்சுவடு  ஆசிரியர் குழுவில் இருந்த மனுஷ்யபுத்திரன், கண்ணன், லஷ்மி மணிவண்ணன் ஆகியோர் கூட்டாக சுபமங்களா இதழில் எதிர்வினையாற்றியிருந்தனர். அதற்கு நான் இச்சிறு பதிலை எழுதினேன். பெரிய ஜனநாயகவாதியாக மதிக்கப்பட்ட கோமல் சுவாமிநாதன் இக்கடிதத்தை வெளியிடவில்லை.

வேறு எங்கும் வெளியிடப்படாத இக்கடிதத்தை இங்கு பிரசுரிக்கிறேன். அப்போது எனக்கு வயது 22. இத்துடன்  மனுஷ்யபுத்திரன், கண்ணன், லஷ்மி மணிவண்ணன் ஆகியோரின் கூட்டுக் கடிதத்தைக் கிண்டல் செய்து கேப்பியார் இதழில் மோகன் எழுதிய குறிப்பொன்றும் இங்கு நன்றியுடன் எடுத்தாளப்படுகிறது.

குருபீடமும் வாரிசு அரசியலும்

அ.மார்க்ஸ்  நேர்காணல் தொடர்பான தொடர்ந்த விவாதங்களை வரவேற்கிறோம். அக்டோபர் 1995 சுபமங்களா இதழில் காலச்சுவடு மும்மூர்த்திகள் எழுதியுள்ள கருத்துகள் மீதான எதிர்வினையைத் தருவது அவசியமாகிறது. அதில் இவரது சிஷ்யர்கள் ……………….. என்று கேட்பதற்கு இவர் மறுப்பு எதுவும் சொல்லவில்லை. என்று வருகிறது. பேட்டி எடுப்பவர்கள் அவரது சிஷ்யர்களாக இருக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறதா என்று தெரியவில்லை. நாங்கள் சுராவின் சிஷ்யர்கள். அப்படியானால் நீங்கள் அமாவின் சிஷ்யர்கள் என்று எதிர்நிலை கட்டமைப்பை உருவாக்கி குளிர் காய நினைக்கிறார்கள்.

தலைமை வழிபாடும் தங்களிடம்தான் இருக்கிறதே தவிர எங்களீடம் இல்லை. எங்களது கருத்துகளில் பெரும்பாலும் உடன்பாடுள்ள ஒரு சிறிய வட்டத்தைத்தான் என்று அமா கூறியுள்ளதை கவனிக்கவும்.

அமைப்பியல், பின்-அமைப்பியல் சிந்தனைகள் எவ்வளவோ தோன்றிவிட்டபிறகு எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் சிஷ்யனாக இருக்கவேண்டிய அவசியமெதற்கு? இந்த நிலைக்கு ஆட்பட்டிருக்கும் மூன்று இளைஞர்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

சுரா ஆசிரியராக இருந்து வெளியான காலச்சுவடு இதழ்களுக்கும் வெகுஜன வணிக நடவடிக்கைகள் நம் வாழ்வு, சிந்தனை மற்றும் ரசனையால் புல்வெளிகளையும் நீர் நிலைகளையும் நஞ்சாக்கிக் கொண்டிருக்கின்றன என்றும் அறிவுஜீவிகளுக்கு இது திருப்தி தராது. இளம் வாசகனை தீவிர எழுத்தைப் படிக்கத் தூண்டும் ஆவலே நோக்கம் என்று கூச்சல் போட்டு வெளியான சமீபத்திய இதழ்களையும் பார்க்கும்போது ஒன்று புலப்படுகிறது.

மொழிபெயர்ப்பாக இருக்கட்டும் அல்லது வேறு எதுவாகினும் தாங்கள் செய்தால் அது சீரியஸ் எழுத்து மற்றவகள் செய்தால் அது ஐரோப்பிய கல்லறைகளிருந்து தோண்டி எடுக்கப்பட்டது என்றும் அவதூறு செய்வதன் அரசியல் ஒருவாறு விளங்கத்தான் செய்கிறது.

இதேபோல் தலித் இலக்கியம் – இயக்கம் பற்றிய இவர்களது சொல்லாடல்கள் அனைத்தும் அதற்கு எதிராகவே இருப்பதை கூர்ந்து கவனிப்பவர்கள் அறிந்துகொள்ளமுடியும். ஊடகத்தின் சவாலை ஏற்று விவாதங்களில் பங்கு பெற்றால் நன்றாக இருக்கும்.

சுபமங்களா வாசகர் வட்டம் என்பது சுபமங்களாவில் என்ன மாதிரியான விஷயங்கள் விஷயங்கள் வெளிவரும் என்பதையும் குறிக்கும். வன்முறை சூழலில்தான் இருக்கிறது, எங்களது எழுத்துக்களில் இல்லை என்ற நேர்காணல் தலைப்பை இன்றைய இலக்கியச்சூழலில் என்று மாற்றிவிட்டார்கள். இன்றைய சூழலில் இலக்கியம் – அரசியல் என்ற வேறுபாடுகள் முற்றிலும் நீங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

காலச்சுவடு-10 இல் கண்ணன் தலையங்கம் எழுதியிருக்கிறார். அதைப் படித்த அழகிய சிங்கர் நீங்கள் எழுதிய தலையங்கம் உங்கள் தந்தை எழுதும் தலையங்கம் போல் உள்ளது. உண்மையா? என்று கேட்கிறார். பதிலில்லை.

 

இறுதியாக சில குறிப்புகள்:

01.சுந்தர ராமசாமி பசுவய்யா என்ற பெயரில் கவிதைகள் எழுதி வந்தார். இப்பொழுது மனுஷ்யபுத்திரன், கண்ணன், லஷ்மி மணிவண்ணன் என்ற பல்வெறு பெயர்களில் எழுதிவருகிறார் என்றும் தெரிகிறது.

02.சுராவின் காலச்சுவட்டில் ஆசிரியர் குழுவில் இருப்பதால் அவருடைய சிஷ்யனாகித் தீரவேண்டிய இந்த மும்மூர்த்திகளுக்கு இருப்பதுபோல் எங்களுக்குக் கிடையாது.

03.அமா சூறாவளி வீசினார், ஞானி தென்றலாகத் தவழ்ந்தார் என்று கூறுவதைத் தவிர்த்து விவாதங்களை நேர்மையாக எதிர்கொண்டால் நன்றாகயிருக்கும்.

04.இலக்கியமும் அரசியலும் வேறு வேறல்ல. எங்கும் தலைமை வழிபாடும் குரு பீடமும் சிஷ்யக்கூட்டங்களும் இருப்பதில் எங்களுக்கு முற்றிலும் உடன்பாடு இல்லை. அது சுரா, அமா யாராக இருந்தாலும் சரி. இதை நீங்களும் உணர்ந்துகொண்டால் நல்லது.

 மு.சிவகுருநாதன்   அண்ணாபேட்டை – 614714   10.10.1995

எழுதியது எப்படி பற்றிய குறிப்பு

அ.மார்க்ஸ் சுபமங்களா நேர்காணலில் சுந்தர ராமசாமியின் தலித் இலக்கியக்கோட்பாடு பற்றி சொல்லியிருந்ததற்கு சுந்தரராமசாமி மறுப்புக்கு மார்க்ஸ் எழுதிய பதிலுரைக்குப் பதிலுரையாக காலச்சுவடு ஆசிரியர் குழுவினர் மனுஷ்யபுத்திரன், லஷ்மி மணிவண்ணன், கண்ணன் மூவரும் சேர்ந்து ஒரு நீண்ட கடிதம் எழுதியுள்ளனர்.

நமது குழப்பமெல்லாம் மூவரும் சேர்ந்து ஒரு கடிதத்தை எழுதுவது எப்படி என்பதே. ஒருவர் பேனாவில் மையூற்ற, அடுத்தவர் எழுத, மூன்றாமவர் கவரில் அடைப்பாரா… அல்லது ஒருவர் சொல்ல, அடுத்தவர் எழுத, மூன்றாமவர் திருத்தங்கள் போடுவாரா… அல்லது ஒருவர் எழுத, அடுத்தவர் வேண்டாதவற்றை அடிக்க, மூன்றாமவர் நகலெடுப்பாரா… அல்லது சில வார இதழ்களில் ஒரே தொடர்கதையை வாரம் ஒருவர் என்று மாறி மாறி எழுதுவது போல் ஆளுக்கொரு பத்தி வீதம் எழுதுவார்களா… அல்லது ஒரே பேனாவை மூவரும் பிடித்துக்கொண்டு எழுதுவார்களா… புரியலயே.

                                                   -மோகன்

 

நன்றி :- கேப்பியார்  (ஜனவரி – பிப்ரவரி 1996)

Share:
  • Add to favorites
  • email
  • Facebook
  • Google Bookmarks
  • Google Buzz
  • PDF
  • Twitter
  • Yahoo! Buzz

இந்திய அணுசக்தித் திட்டங்களை அம்பலப்படுத்தும் நான்கு குறுநூற்கள் 

 

                                                                                                           – மு.சிவகுருநாதன்

  (கூடங்குளம் அணுஉலை, இந்திய அணுசக்தி திட்டங்கள், ஒப்பந்தங்கள் குறித்த 4 குறுநூற்களின் அறிமுகம்) 

 

 

01. கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் 

                                                                                    – அ. முத்துகிருஷ்ணன்

    கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் பல மாதங்களாகத் தொடரும் நிலையில் அப்போராட்டங்கள் மற்றும் அணு உலைகளின் பாதிப்புக்களை விளக்கும் இக்குறுநூல் உயிர்மை 100 வது (டிசம்பர் 2011) வெளியான கட்டுரைகளின் தொகுப்பாகும்.  மிக எளிமையாக அணு உலைகளின் பாதிப்புக்களைச் சொல்லும் இக்குறுநூலை உயிர்மை, தலித் முரசு, வாசல், பூவுலகு, விஜயா பதிப்பகம், சமநிலைச் சமுதாயம், பசுமை நடை, பயணி, NAAM, THE ROOTS, Chennai Solidarity Group for Kudankulam Struggle, தமிழக பசுமை இயக்கம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், மே பதினேழு இயக்கம் போன்ற பல்வேறு பதிப்பகங்களும் இயக்கங்களும் சேர்ந்து மக்கள் பதிப்பாக வெளியிட்டுள்ளன.  மின்சாரத் தேவையையொட்டி நடுத்தர வர்க்க மக்களின் பொதுப்புத்தியில் படிந்துள்ள அணு உலை ஆதரவுக் குரலை அசைக்கும் வல்லமை இந்த குறுநூலுக்கு உண்டு என்பதில் பெருமிதம் கொள்ளலாம்.

அணு உலைகள், மனித உரிமைகள் போன்ற மக்கள் பிரச்சினைகளில் பாதிக்கப்படும் மக்களுக்காக போராடும் மற்றும் கருத்தியல் சக்திகளாகத் திகழும் அ. மார்க்ஸ், அ. முத்துகிருஷ்ணன்  போன்றவர்களை அந்நிய கை கூலிகள் என்று கேவலமாக எழுதும் இந்துத்துவ வெறி எழுத்தாளன் ஜெயமோகனுக்கும் அவனது துதிபாடிக் கும்பல்களுக்கும் இந்நூல் பேரிடியாக அமையும் என்பதில் அய்யமில்லை.

ரஷ்யாவின் VVER-1000 அணு உலைகள் இதுவரை கடற்கரையில் அமைக்கப்பட்டதில்லை.  ரஷ்யப் பொறியாளர்களுக்கு இதில் அனுபவமும் இல்லை.  இதிலுள்ள குளிர்விக்கும் கலனில் முதன் முறையாக கடல் நீரைப் பயன்படுத்தி பரிசோதிக்கப் போகிறார்கள்.  கூடங்குளம் – அணு உலையா இல்லை, VVER உலைகளுக்கான பரிசோதனைக் கூடமா? கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவனந்தபுரம், பட்டனந்திட்டா, கொல்லம் மாவட்டத்தின் மக்கள பரிசோதனைக் கூட எலிகளா? என்று கேட்கும் போது நடுத்தர வர்க்க மனச்சாட்சி கொஞ்சமாவது அசைய வாய்ப்புண்டு.  அப்போதாவது அவர்களது பொதுப்புத்தியில் ஏதேனும் மாற்றம் நிகழும்.

கதிரியக்கக் கழிவுகளை பந்தாக உருட்டு வைத்துவிடுவோம் என்று பேசும் அப்துல்கலாம்களுக்கு ப்ளுடோனியம் 239-ன் அரை ஆயுள் 24000 ஆண்டுகள், யுரேனியம் -235-ன் அரை ஆயுள் 70 கோடி ஆண்டுகள் என்பது தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.  “அரசவைக் கோமாளிக்கு சில கேள்விகள்” – கட்டுரை அறிவுப்பூர்வமானவை.  இதைப்போன்ற எண்ணற்ற கேள்விகள் அப்துல்கலாமை நோக்கிக் கேட்கப்பட்டுவிட்டன.  ஆனால் எதற்கும் பதில் கிடைத்தபாடில்லை.  அவரது இணையக் கட்டுரையை ஒரு பள்ளிக்கூட மாணவனால் கூட மறுக்கமுடியும்.

அணு உலையின் பாதிப்புகள், கதிரியக்க ஆபத்து, விபத்துக் காப்பீட்டுச் சட்டம், உலகின் அபாய  அணு உலைகள், மாற்று மின்சாரம் போன்ற பல தலைப்புகளில் எளிமையான விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுப.உதயகுமார் குறித்த அறிமுகமும் உள்ளது.  “அமெரிக்காவில் வாழ்ந்த பின் ஏகாதிபத்திய அடிவருடிகளாக மாறாமல், தன் தாய் நாட்டிற்காக எல்லாவற்றையும் விடுத்து தன் மனசாட்சியின் குரலைப் பின்தொடர்ந்து வந்த மிகச் சிலரில் உதயகுமார் முதன்மையானவர்”, என்று சொல்லப்பட்டுள்ளது.  இது நூற்றுக்கு நூறு சரி.  இப்படி உண்மையான தேச பக்தர் மீது தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்படுகிறது.  இருந்தாலென்ன? மகாத்மா காந்தியும் 1947 ஆகஸ்டு 15க்கு முன்பு தேசத் துரோகிதானே! மன்மோகன்சிங்குகள் தேசபக்தர்களாக வலம் வரும் நாட்டில் உதயகுமார்கள் தேசத் துரோகிகளாகத்தான் இருக்க முடியும்.

64 பக்கங்கள் கொண்ட இச்சிறு நூலில் ஆங்காங்கே தேவையான படங்களும், கருத்துப் படங்களும் நிரம்பியுள்ளன.  இது குறித்த விரிவான வாசிப்பு தேவைப்படுவோருக்கு உதவிய நூற்கள் – கட்டுரைகள் பெரிதும் பயன்படும்.  மலிந்திருக்கும் எழுத்துப் பிழைகளை திருத்தம் செய்து வெளியிட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

விலை: ரூ. 15                பக்கம் : 64

வெளியீடு    :     

             உயிர்மை பதிப்பகம்,
            11/29, சுப்பிரமணியம் தெரு,
            அபிராமபுரம், சென்னை – 600 018.
            பேச: 044 – 24993448,
            மின்னஞ்சல்: uyirmmai@gmail.com.

02. உயிருக்கு உலை வைக்கும் அணு உலைகள் வேண்டாம் 

                                                                                 – கட்டுரைத் தொகுப்பு (வெளிச்சம்)

அண்மையில் ஜப்பான் நாட்டில் சுனாமியால் புகுஷிமா அணு உலை விபத்து நடந்தேறியவுடன்  கூடங்குளம் அணு உலையைத் திறக்க மத்திய அரசும் அணுசக்திக் கழகமும் விரைவு காட்டிய வேளையில் திரண்டெழுந்த மக்கள் புரட்சி பல மாதங்களாக இன்றும் நீடித்திருக்கிறது.  பல்வேறு வடிவங்களில் பல தரப்பிலிருந்து இப்போராட்டங்களை ஒடுக்கச் செய்யப்படும் முயற்சிகள் இன்று வரை தோல்வியைச் சந்தித்துள்ளன.

கூடங்குளம் போராட்டத்தை ஒட்டியும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் போலி ஆய்வு முடிவுகள் குறித்தும் தீராநதி, காலச்சுவடு, சாளரம், பசுமைத் தாயகம் ஆகிய இதழ்களில் வந்த 5 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 70 பக்கங்களுடன் வெளியான இக்குறுநூல் வெளிச்சம் அமைப்பால் இலவசமாக விநியோகிகப்பட்டுள்ளது

“அணுமின் நிலையங்கள் தேவையா?” என்ற இரா. அருளின் கட்டுரை, அணு மின்சாரம் தூய்மையானது, மாசுக்கள் குறைந்தது, பொருளாதார ரீதியில் பலனளிக்கக் கூடியது, குறைந்த செலவில் (அப்துல்கலாம் சொல்வது போல் ரூ. 3க்கு ஒரு யூனிட் அணு மின்சாரம்) தயாரிப்பது, 100% விபத்தில்லாதது என்றெல்லாம் அதிகார வர்க்கம் நாளும் சொல்லிவரும் பொய்மைகளை அம்பலப்படுத்துகிறது.

இந்தியப் பேரரசு தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் இரு வேறு அளவு கோல்களை பயன்படுத்துவதையும் உலகமெங்கும் அணு உலைகளுக்கு ஏற்பட்டு வரும் ஆபத்தையும் இவையனைத்தும் படிப்படியாக மூடப்பட்டு வருகின்ற செய்தியினை புள்ளி விவரங்களுடன் இக்கட்டுரை விளக்குகிறது.

அணுசக்தித் திட்டங்களுக்கு மாற்றாக மாற்று எரிசக்தித் திட்டங்களை முன்னெடுப்பதுடன் தமிழக அரசு கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்துவதோடு இனி தமிழ்நாட்டில் அணுசக்தித் திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று கேரளா, மேற்கு வங்காளம் போல் அறிவிக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது. அணு உலையை நிரந்தரமாக மூடினால் அச்சத்தைப் போக்கும் சாமியாடிகள் மற்றும் பேயோட்டிகளுக்கு வேலை இல்லாமற்போகும்.

“கூடங்குளம் காத்திருக்கும் அபாயம்” என்ற மண்குதிரையின் கட்டுரை 1989இல் தூத்துக்குடியில் ஜார்ஜ் பெர்ணான்டஸ் தலைமையிலான போராட்டம் தொடங்கி தற்போது நடைபெறும் மக்கள் எழுச்சியையும் விவரிக்கிறது.  இத்திட்டம் சோவியத் யூனியனிலிருந்து வருவதால் இடதுசாரிகள் மவுனம் சாதிக்கிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.  இது உண்மை அல்ல.  ஆளும் காங்கிரஸ், தி.மு.க., இந்து மத வெறி பா.ஜ.க. ஆகியவற்றுடன் இணைந்து இடதுசாரிகள் அணு உலை ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாகவே எடுத்திருக்கிறார்கள்.

VVER-1000 அணு உலைகள் இரண்டில் ஒன்று டிசம்பர் 2009லும் மற்றொன்று மார்ச் 2010லும் செயல்பட்டு தலா 1000 மெகாவாட் மின்சாரம் கிடைத்து நாட்டின் மின் தட்டுப்பாட்டிற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது இப்போராட்டம் வலுப்பெற்றிருப்பதாகச் சொல்கிறார்.  இந்த கணக்கெல்லாம் உண்மையில் நடக்கக் கூடியவை அல்ல.  இந்திய அரசும், அணுசக்தி அதிகார அமைப்புகளும் உருவாக்கி வரும் மாயைகள் என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.

அணுசக்தித் துறையின் அநியாயச் செலவுகளைக் கேள்விக்குள்ளாக்கிய புகழ்பெற்ற அறிஞர் டி.டி. கோசாம்பியின் ஆய்வுப் பொறுப்பு பறிக்கப்படுதல், விஞ்ஞானி கே.எஸ். ஜெயராமன்-ஐ ‘Science Today’ பத்திரிக்கையில் எழுத விடாமல் தடுக்கப்படுதல், தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக அறிவியற் கோட்பாட்டுத்துறைப் பேராசிரியர் டாக்டர் தீரேந்திர சர்மா இரவோடிரவாக மொழித் துறைக்கு மாற்றப்படுதல் போன்ற அக்கிரமங்களை அணு உலையால் பயனடையும் போலி விஞ்ஞானிகள் கும்பல், அரசு மற்றும் அரசு அதிகாரிகள், அணு உலை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் போன்றவற்றின் கைங்கர்யத்தால் நிகழ்ந்தேறிய விதத்தை இராஜேந்திர பிரசாத்தின் கட்டுரை வெளிப்படுத்துகிறது.

இலங்கை இறுதிக்கட்டப் போரில் ராஜபக்சேயின் இனவெறி அரசுக்கு உதவி செய்ததன் வாயிலாக தெற்குப் பிராந்தியத்தில் சீனா வெகுவாக காலூன்றியுள்ளது.  இதன் காரணமாக தமிழ்நாடும் கேரளாவும் முதல் பலி என்றும் அதற்கு இந்த கூடங்குளம் அணு உலை பெரிதும் உதவும்
என்கிறார் பா. செயப்பிரகாசம்.

“அரசியல் இயக்கங்களை தூர நிறுத்தியதுதான் போராட்டக் குழு செய்த உன்னதமான செயல்” என்ற மதிப்பிடும் இக்கட்டுரை அணுசக்தியின் விளைவுகளை மக்களிடம் போராட்டக்காரர்கள் கொண்டு சேர்த்திருக்கிறார்கள் என்றும் கூறுகிறது.

பா. செயப்பிரகாசம் தனது மற்றொரு கட்டுரையில் அப்துல்கலாம் மன்மோகன், சிதம்பரம், பிரணாப் போன்றவர்களின் பிம்பந்தான் என்பதைத் தெளிவுப்படுத்துகிறார்.

அ. மார்க்ஸ் டிசம்பர் 2011 தீராநதி இதழில் அப்துல்கலாமிற்கு ஒரு கட்டுரையில் எதிர்வினையாற்றியிருந்தார்.  அதுபோல பல்வேறு கட்டுரைகள் இதழ்களிலும் இணையதளங்களிலும் வெளியாகியுள்ளன.  பெரிய கட்டுரைகளைத் தவிர்த்து அவற்றைச் சேர்த்து இந்த இலவச வெளியீட்டை மேலும் செழுமைப்படுத்தியிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது.

விலை: இல்லை        பக்கம்: 70

வெளியீடு    :   

             வெளிச்சம்,
            கு. பால்ராஜ், வழக்கறிஞர்,
            செயல்பாட்டாளர்கள் பொதுமேடை,
            35 A, முடங்கியார் சாலை, ராஜபாளையம். செல்: 94434 56023.

03. இந்திய அணுசக்தித் திட்டம் – அறிவிப்புகளும் உண்மையும் 

                                                                                                      – சுவ்ரத் ராஜு

‘மும்பை அரசியல் – பொருளாதார ஆய்வுக் குழு’வின் ‘இந்தியப் பொருளாதாரம் பற்றிய நோக்குகள்’ என்ற இதழின் 48வது வெளியீட்டில் இயற்பியலாளர் சுவ்ரத் ராஜு இந்திய அணு ஆற்றல் திட்டங்களைப் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார்.  இக்கட்டுரைகளை அனாமதேயன் மொழி பெயர்த்து தனது வலைப்பூவில் வெளியிட்டிருந்தார்.  வினவு உள்ளிட்ட பல இணையப் பக்கங்கள் இதனை வெளியிட்டன.  இத்துடன் “தி இந்து”  நாளேட்டில் அப்துல்கலாம் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக சுவ்ரத் ராஜும் எம்.வி. ரமணாவும் எழுதிய கட்டுரையயான்றும் இணைக்கப்பட்டு 80 பக்கம் கொண்ட இக்குறுநூல் உருவாகியுள்ளது.

“அணுசக்திப் புரட்சி என்பது தொழிற்புரட்சியைப் போன்றே” என்று சொல்லி ஹோமி ஜஹாங்கீர் பாபாவிடம் இந்திய அணுசக்தித் துறையை கையளித்த ஜவஹர்லால் நேருவும் அமெரிக்காவிற்கு ஆதரவான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றி “அணு மின்சக்தி தூய்மையானது; பாதுகாப்பானது; செலவு குறைந்தது” என்றெல்லாம் பித்தலாட்டம் நடத்தும் மன்மோகன் சிங்கும் ஒரே பாதையில்தான் செல்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

இந்தியாவில் அணுமின்சக்தி உற்பத்தி பற்றிய பொய்யான, ஆர்வக்கோளாறான கணிப்புகளைத்தான் இந்திய அணு சக்தித் துறை (DAE) தொடக்கம் முதலே வெளியிட்டு வருகிறது.  ஹோமி ஜஹாங்கீர் பாபா, விக்ரம் சாராபாய், அனில் கடோத்கர், ஜெயின் என்ற வரிசையில் எவரும் உண்மைகளை ஒத்துக்கொண்டதில்லை.  பொய்யான தகவல்களையும் அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களையும் அறிவியலின் பெயரால் மக்களை ஏமாற்றவே செய்துள்ளனர்.

இந்தியாவில் தலைமைக் கணக்கு (CAG) அதிகாரி,  “மார்ச் 1998 முடிய

ரூ. 5291.48 கோடிகளைச் செலவழித்தும் கூடுதல் மின்னுற்பத்தி பெரிய பூச்சியமே” என்று தணிக்கை அறிக்கையில் எழுதியதும் 2009 ஆம் ஆண்டிலும் முந்தைய ஆண்டைவிட அணு மின் சக்தி உற்பத்தி 3% அளவிற்கே இருந்ததையும் சுவ்ரத் ராஜு அம்பலப்படுத்துகிறார்.

முப்படி நிலை அணுமின் திட்டத்தின் மூன்றாவது படிநிலையில் தோரியம் – 232 (Th 232)ஐ யுரேனியம் – 233 (U 233)ஆக மாற்றம் செய்து, இதனை அணுப்பிளப்பு எரிபொருளாகப் பயன்படுத்தி அணுமின்சக்தி தயாரிப்பது.   உலகில் எவரும் செய்யாத நடைமுறைச் சாத்தியமற்ற இம்முறையைத் தொடங்கி 55 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்தியா இன்னும் முதல் படியிலேயே நிற்பதை எடுத்துக்காட்டுகிறது.

“அணுசக்தி அமைப்புக்களைக் கட்டுப்படுத்தும் உறுதியான நிர்வாக கட்டமைப்புகள் இல்லை” என்று சொல்லும் ஆசிரியர், பாபா நேருவிடம் தனக்கிருந்த தனிப்பட்ட நெருக்கத்தினைப் பயன்படுத்தி அரசாங்கத்தின் பிற அங்கங்களில் செயல்படும் குறைந்தபட்ச கண்காணிப்பு, சீர் செய்தல் வழிமுறைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதையும் 1954இல் நிறுவப்பட்ட இவ்வமைப்பு கெட்டித் தட்டிப்போன சிறிய அதிகார வர்க்கக் கும்பலால் 55 ஆண்டுகளைக் கடந்த பின்னும் நிர்வகிக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்.

பாபாவின் தொடக்கக் கால கணிப்புக்குப் பின் 55 ஆண்டுகள் ஆனபிறகும் இந்தப் படிநிலைகள் தொடர்பான தொழில் நுட்பங்கள் நம்பிக்கை அளவிலேயே இருக்கின்றன.   முதல் படி நிலை “உலகத்தரத்திலான செயல்பாட்டிலும்”, இரண்டாவது படிநிலை “உலகின் முன்னேறிய தொழில்நுட்பம்” என்ற நிலையிலும் மூன்றாவது படிநிலை “உலகளவில் தனித்துவமானது” என்ற நிலையிலும் இருப்பதாக இந்திய அணுசக்தித் துறை கணிப்பதையும் இரண்டாவது படிநிலையான வீரிய ஈனுலை கட்டும் திட்டம் அணு ஆயுதத் தயாரிப்புடன் நெருங்கிய உறவு கொண்டிருப்பதையும் சுவ்ரத் ராஜு அம்பலப்படுத்துகிறார்.

இந்த வீரிய ஈனுலைகளில் எரிபொருளுடன் யுரேனியப் போர்வை உள்ளது.  இப்போர்வை அணு ஆயுதத் தரத்திலான புளூட்டோனியத்தைப் பெற்றெடுக்கிறது.  கல்பாக்கத்தில் கட்டப்படும் PFBR மட்டுமே ஆண்டுதோறும் 140 கிலோ கிராம் புளூட்டோனியத்தை உற்பத்தி செய்ய முடியும் என்ற க்ளாசர் மற்றும் ரமணாவால் மதிப்பீடுகள் இந்திய அரசு பெருமளவில் அணு ஆயுதக் குவிப்பு செய்வதற்கு வழி வகுக்கும் என்பதையும் தெளிவாக்குகிறது.

“சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அணு மின் சக்தித் திட்டங்கள் பெருந்தோல்விகளைச் சந்தித்த போதும் மத்திய அரசின் பேராதரவைப் பெற்றிருப்பதற்குக் காரணம் அணு குண்டு தயாரிப்பதற்கு அதன் பங்களிப்பே”  என்பதை நூலாசிரியர் உறுதி செய்கிறார்.  ஹோமி பாபா, விக்ரம் சாரா பாய் போன்ற அணு விஞ்ஞானிகள்,  நேரு, இந்திரா காந்தி, ராஜுவ் காந்தி, வாஜ்பாய், இன்றைய மன்மோகன்சிங் போன்றோரது கூற்றுக்களும் செயல்களுமே இதற்கு ஆதாரமாக இருக்கின்றன.

எக்கேடு கெட்டாலும் அணுசக்தித் துறையில் ஏராளமாக முதலீடு செய்வது மேலும் கேள்வி கேட்க முடியாத நிலையில் இந்திய அணு சக்திக் கழகத்தை வளர்த்தெடுத்தது, தேசப் பாதுகாப்பு என்ற போலி முகமூடிக்கள் மறைத்துக் கொண்டது போன்றவற்றின் ஊடாக இந்திய மக்களின் வரிப்பணம் பெருமளவில் கொள்ளை போக ஆவன செய்ததுதான் அணு மின் சக்தித் துறையின் கை கண்ட பலன்  என்பது நமக்குப் புரிகிறது.

அமெரிக்க நலன்களைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் பின்னுள்ள அரசியல் செயல்பாட்டினை பின்னிணைப்புக் கட்டுரை விளக்குகிறது.  டாக்டர் ஆர். ரமேஷ், டாக்டர். வீ. புகழேந்தி, டாக்டர். வி.டி. பத்மநாபன் ஆகியோரடங்கிய பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர் குழுவின் கட்டுரையும் கூடங்குளம் அணு உலை ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது? என்ற சுவ்ரத் ராஜு, எம்.வி. ரமணாவின் கட்டுரையும் இடம் பெற்றுள்ளன.

இறுதியான 9 பக்கங்கள் நீளும் விரிவான  References  வாசிப்புக்கும் ஆய்வுக்கும் வழி கோளும் என்று நம்பலாம்.

விலை         :     ரூ. 50            பக்கம்     :     80

தொகுப்பு    : க. காமராசன்

வெளியீடு    :    

            முகம்,
            20/37, 13வது தெரு,
            அய்யர் மனைப்பிரிவு, சிங்காநல்லூர்,
            கோவை – 5, போன்: 0422 – 2593938,
            மின்னஞ்சல்     : mugambooks@gmail.com
            இணையம்     : www.mugam.in

04. பேரழிவுக்கான இந்திய அணுசக்தி ஒப்பந்தங்கள் – வல்லரசுக் கனவிற்கான விலை

                                                                       – மெய். சேது. ராமலிங்கம்

இந்திரா காந்தி காலத்தில் தொடங்கப்பட்ட வலிமையான இந்தியா என்ற பிரச்சாரத்தைத் தொடங்கி ரா (RAW) போன்ற உளவு அமைப்புகளின் மூலம் தெற்காசியப் பகுதிகளில் தங்களுக்குக் கீழ்ப்படியாத ஆட்சியாளர்களை எதிர்த்து உள்நாட்டுக் கலகங்கள் உற்பத்தி செய்யப்பட்ட முறைகளை, அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டதையும் இந்நூல் நினைவுப்படுத்துகிறது.  இதன் தொடர்ச்சியாக வல்லரசுக் கனவின் பிதாமகனான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மேட்டுக்குடி இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடம் உருவாக்கிய இப்பிரச்சாரம் இன்று வரை தழைத்திருப்பதன் உண்மையை விளக்குகிறார்.

அணுசக்தி இழப்பீட்டுச் சட்டத்தின் மூலம் வெறும் 1500 கோடிகளை மட்டும் கொடுத்துவிட்டு நாட்டு மக்களை பல தலைமுறைகள் அழித்து விடலாம் என்ற நிலையும் அதற்கு மேலான இழப்பீட்டை நம் நாட்டு மக்கள் தலையில் சுமத்த வேண்டும் என்பதுதானே நமது அரசுகளின் நோக்கம்.  வல்லரசுக் கனவிற்கான விலை எமது உயிர்கள் பலிகடாவாக்கப்படுவதை தெரியாமல் பெரும்பான்மையான இந்திய சமூகம் தூங்கிக் கொண்டுள்ளது.

பல ஆயிரம் கோடிகள் செலவழித்து தயாரிக்கப்படும் அணு மின்சாரத்தை விட காற்றாலை, சூரிய மின்சாரங்கள் செலவு குறைந்தவை.  மாசுக்களற்றவை.  இருப்பினும் நமது அமெரிக்கச் சார்புத் தன்மை நம்மை அடிமைகளாக மாற்றி வருவதை இந்நூல் குறிப்பிடத் தவறவில்லை.

கதிரியக்கம் என்றால் என்ன? அதன் பாதிப்புகள், அணுக் கழிவுகள் பற்றி மிகவும் எளிமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.  அணு மின் நிலையங்களில் ஏற்பட்ட விபத்துகள், தொடர் கதிரியக்கத்தின் பல தலைமுறைப் பாதிப்பு போன்றவற்றையும் இந்நூல் விவரிக்கிறது.

அமெரிக்க மற்றும் பன்னாட்டு அணுக் கம்பெனிகளை பாதுகாக்கும் அணு உலை விபத்துக்களுக்கான குடிமை இழப்புச் சட்டம் – 2010-ன் முக்கிய அம்சங்களோடு இச்சட்டமானது இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21 அளிக்கும் உயிர் வாழும் உத்திரவாதத்திற்கு எதிராக உள்ளதையும் குறிப்பிடுகிறது.

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட புகுஷிமா அணு உலை விபத்து நடந்த பிறகும் இந்திய அரசு, இந்திய அணு சக்தி கழககும் பாடம் கற்றுக் கொள்ளவில்லையயன்றால் இதன் பாதிப்பு மிகவும் பாரதூரமானதாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது இந்நூல்.

அணு ஆயுத வலிமை, நாட்டை முழுமையாக ராணுவமயப்படுத்துதல் போன்றவற்றால் பட்டினிச் சாவுகளும் விவசாயிகளின் தற்கொலைகளும் தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும் என்ற எச்சரிக்கையையும் இந்நூல் விடுக்கிறது.  அணு உலை தொடர்பான மதியின் தினமணி கார்ட்டூன் இரண்டு இடம் பெற்றுள்ளது.

சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தி 5% என்று உள்ளது.  இது தவறு.  மரபுசாரா மாற்று மின்னுற்பத்தி சுமார் 12% ஆகும்.  இம்மாதிரியான பிழைகள் இருப்பினும் கூடங்குளம் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் இந்த நூலையும் நாம் பாராட்டலாம்.

விலை     :     ரூ. 20                பக்கம்     : 38

வெளியீடு    :   
 

            சுற்றுச் சூழல் பாதுகாப்பு கூட்டமைப்பு,
            24, ராஜுவ் காந்தி நகர், எடமலைப்பட்டிப்புதூர்,
            திருச்சி – 620 012.
            செல்        :    94431 43380, 94426 10605.

Share:
  • Add to favorites
  • email
  • Facebook
  • Google Bookmarks
  • Google Buzz
  • PDF
  • Twitter
  • Yahoo! Buzz

சிற்றிதழ் அறிமுகம்


மன்னார்குடியிலிருந்து ஓர் இதழ்    -மு.சிவகுருநாதன்


(தமிழின விடியல், தமிழ் மொழி மற்றும் தமிழின மேம்பாட்டிற்கான கருக்கல் – கலை, இலக்கிய, அரசியல், பண்பாட்டு இரு மாத இதழ்)

   திருவாருர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து அம்ரா பாண்டியனால் கருக்கல் – கலை, இலக்கிய, அரசியல், பண்பாட்டு இரு மாத இதழ் வெளிவந்துள்ளது. முதல் இதழ் மார்ச்-ஏப்ரல்-2012 சமீபத்தில்தான் என் பார்வைக்கு வந்தது.

  48 பக்கங்கள் நிறைந்த இந்த இதழ், எந்த இசத் திற்குள்ளும் அடைபடாமல் தமிழின விடியல், தமிழ் மொழி மற்றும் தமிழின மேம்பாடு ஆகியவற்றை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்படுமென பிரகடனம் செய்கிறது.

  தமிழ்த் தேசியப் பொதுவுடைமை கட்சி (ததேபொக) பெ.மணியரசன் நேர்காணல், தியாகு, பா.செயப்பிரகாசம் ஆகியோரின் கட்டுரைகளைப் பார்க்கும்போது வழக்கமான தமிழ் தேசியத்திற்குள் இதழ் அடைபட்டுவிடுமோ என்ற அச்சம் வருகிறது. இந்தியத் தேசியம், திராவிடத் தேசியம் ஆகியவற்றை மறுக்கும்போது தமிழ்த் தேசியம் மட்டும் இவற்றிலிருந்து எவ்வாறு மேம்பட்டது என்று மணியரசன் விளக்கவேண்டும். ஆனால் செய்வதில்லை. தேசியம் ஒரு பாசிசம் என்ற கருத்தில் உடன்பாடில்லையென்றால் இந்தியத் தேசியம், திராவிடத் தேசியம் ஆகியவற்றை மட்டும் ஏன் எதிர்க்கவேண்டும்.

  தமிழ்ச்சூழலில் பெரியாரை ஆதரித்து தமிழ் தேசியம் பேசுபவர்களும் பெரியாரை எதிர்த்து தமிழ் தேசியம் பேசுபவர்களும் பெரியாரின் இந்துத்துவ எதிர்ப்பை கணக்கில் கொள்வதில்லை. எனவேதான் இந்துத்துவவாதிகளுடன் ஒரே மேடையைப் பகிர்ந்துகொள்வதில்கூட இவர்கள் வெட்கப்படுவதில்லை.

   சமகால வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மக்கள்ப் போராட்டம் கூடங்குளம் அணு உலைக்கு எதிரானதாகும். தமிழகத்தின் அதிகாரத்தை மாறி மாறி சுவைக்கும் இரு பெரும் திராவிடக் கட்சிகளும் பெரும்பான்மையான பொதுமக்களும் இப்பிரச்சினையில் எடுத்துள்ள நிலைப்பாடு மக்களுக்கு எதிராக இருப்பது குறித்து நாம் ஆராயவேண்டிய நேரமிது. ஜனநாயகம் பற்றிப் பேசும் நாம் இவற்றை ஏற்றுக்கொள்ளமுடியுமா?  நமது அண்டை மாநிலமான கேரளாவில் இது சாத்தியமா என்றும் யோசிக்கவேண்டும். இங்குதான் தமிழ் தேசியர்களும் தமிழ் அறிவுலகமும் பெற்றிருக்கின்ற வீழ்ச்சி புலப்படும்.

  அப்துல் கலாமின் கூடங்குள விஜயம் மக்களிடம் அவரின் முகமுடி கிழிந்ததைத் தவிர வேறெந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. அவரின் இலங்கைப் பயணத்தில் மீனவர்கள் நலன் சார்ந்ததாகச் சொல்லப்பட்ட கருத்துகள் பன்னாட்டு மூலதனத்திற்கு ஆதரவான குரல். அப்துல் கலாம் உள்ளிருப்பது பன்னாட்டு மூலதன, அணு ஆயுத, போர்த்தளவாட விற்பனை முகவரின் முகம். இவரின் இந்துத்துவ முகத்தைகூட மன்னிக்கலாம். ஆனால் பன்னாட்டு கைகூலி முகத்தை மன்னிக்கவே முடியாது.

  (இங்கு ஓர் இடையீடு:- இந்துத்துவத்தின் பின்புலத்தில் சுதேசிக் கருத்தாக்கம், தமிழ் தேசியத்திற்கு ஆதரவான நிலைப்பாடு இருப்பதால்தானோ என்னவோ தமிழ் தேசியர்கள் இந்துத்துவத்துடன் இணக்கம் கொள்ள வைக்கிறது.)

  ப.பரிதி பாண்டியனின் சுட்டுவிரல் பத்தியில்  நையாண்டி ரசிக்கும்படியாக உள்ளது. குமுதம் அரசு, உயிர்மை மனுஷ்யபுத்திரன் போன்றோர் இவரின் எள்ளலுக்குத் தப்பவில்லை. தொடரட்டும்.

  கல்வி பற்றிய பாலமுரளி வர்மன் கட்டுரை நடப்பு கல்விமுறையில் உள்ள குறைகளைச் சுட்டுகிறது; அங்கலாய்க்கிறது. ஆனால் மாற்றுவழிகளைப் பற்றிப் பேச மறுக்கிறது. இடதுசாரி, வலதுசாரி என அனைவரும் ஒழுக்கக்கல்வி பற்றிப் பேசுகிறார்கள். எந்தவகையான ஒழுக்கக்கல்வி என்பதில்தான் பிரச்சினை வருகிறது.

   சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று சொன்னதற்கேற்ப இரா.மோகன்ராஜன், தாமிரா ஆகியோரின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இரா.காமராசு, பசு.கவுதமன், பால செழியரசு, கோ.அருணகிரி, கலைபாரதி ஆகியோரது கவிதைகள் முதல் இதழில் வெளியாகியுள்ளன. அனார் கவிதைத் தொகுப்பு விமர்சனமும் இடம் பெற்றுள்ளது.

   இதழ் தொடர்ந்து வெளியாக வேண்டுமென்பதே நாமனைவரின் எதிர்பார்ப்பு.

தனி இதழ் ரூ 15 

ஆண்டு சந்தா ரூ 100 

மூன்றாண்டு சந்தா ரூ 250

தொடர்பு முகவரி

5/103, முதன்மைச் சாலை,

அசேசம்-614001,

மன்னார்குடி.

தொலைபேசி 04367255694

அலைபேசி 7598428694

மின்னஞ்சல் pandianamra@gmail.com

Share:
  • Add to favorites
  • email
  • Facebook
  • Google Bookmarks
  • Google Buzz
  • PDF
  • Twitter
  • Yahoo! Buzz

பெற்றோர்களின் ஆர்வக்கோளாறை பணமாக்கும் தமிழக அரசு

                                                                                            -மு.சிவகுருநாதன்

    தேர்வாணையத்தேர்வுகள், கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகள், ஆசிரியர் தகுதித் தேர்வுகள் போன்ற தேர்வுகளுக்கு லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிகின்றன. விண்ணப்பங்கள் பெறுவதில் தள்ளு முள்ளு, அடிதடி நடப்பதை ஊடகங்கள் வழி அறியமுடிகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்ப விநியோக முறைகேடுகளால் தர்மபுரியில் காவல்துறை அட்டூழியம் அரங்கேறியது.

   இவற்றில் அரசு எந்திரத்தின் ஆணவ மற்றும் அலட்சியப்போக்கு இதன் மூலம் வெட்டவெளிச்சமாகிறது. நாட்டில் படித்தவர்கள் எத்தனை பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் அரசின் துறைகள் செயல்படுவது கேவலமானது.

  ஆனால் சுமார் 1600 மருத்துவப் படிப்பு இடங்களுக்காக இன்னும் +2 தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில் 25000 மருத்துவப்படிப்பு விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்தும் தொடர்ந்து கூட்டம் அலைமோதுவதாக செய்திகள் வருகின்றன.

  பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் டாக்டராக வேண்டும் முனைப்புடன் இருப்பது தெரிகிறது. தங்கள் குழந்தைகள் என்ன மதிப்பெண் எடுப்பார்கள் என்றுகூட தெரியாத நிலையில் இவ்வாறு அதீத ஆர்வக்கோளாறுடன் செயல்படுவதில் இருக்கும் முனைப்பு  அக்குழந்தைகளின் வேறு நலன் சார்ந்த நடவடிக்கைகளில் மட்டும் ஏன் இல்லை என்று கேட்கத் தோன்றுகிறது.

  +2 தேர்வு முடிவுகளை வெளிவருவதற்கு முன்னதாக பெற்றோர்களின் ஆர்வக்கோளாறை பணமாக்கும் வேலையை அரசு செய்வது அநியாயமானது. +2 தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட எவ்வித ஏற்பாடும் இல்லாத நிலையில் பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பதை உடனடியாக நிறுத்தவேண்டும்.

   +2 தேர்ச்சி பெறாதவர்கள் கூட இப்போது விண்ணப்பம் வாங்க வாய்ப்புள்ளது. +2 மதிப்பெண் பட்டியலுடன்தான் விண்ணப்பிக்க வேண்டும் எனும் போது  ஏன் முன்னதாக விண்ணப்பங்களை விநியோகிக்கவேண்டும்?  நுழைவுத்தேர்வு இல்லை என்ற நிலையில் அரசின் இந்தக் கொள்ளையை யாரும் கண்டுகொள்வதில்லை. எதிர்கட்சிகளுக்கு இதையெல்லாம் கண்டுகொள்ள நேரமில்லை. கல்வியாளர்களாவது குரல் கொடுக்க வேண்டும்.

Share:
  • Add to favorites
  • email
  • Facebook
  • Google Bookmarks
  • Google Buzz
  • PDF
  • Twitter
  • Yahoo! Buzz

பக்தி இயக்கம் – பக்தி இலக்கியம் பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் செய்யப்படவேண்டும்

                                                                                                      –மு.சிவகுருநாதன்

(14.05.2012 அன்று திருவாருரில் நடைபெற்ற சோலைசுந்தரபெருமாளின் ‘தாண்டவபுரம்’ நாவல் கருத்தரங்கம் குறித்த பதிவு.)

     தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் (தமுஎகச) சார்பில் 14.05.2012 அன்று திருவாருர் காமராசர் திருமண அரங்கில் சோலை சுந்தரபெருமாளின் ‘தாண்டவபுரம்’ நாவல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. தமுஎகச மாவட்டத்தலைவர் கு.வேதரத்தினம் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தமுஎகச கிளைச்செயலாளர் கவிஞர் மனிதநேயன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தமுஎகச மாவட்டச்செயலாளர் இரா.தாமோதரன் மூன்று கருத்தரங்கச் சொற்பொழிவாளர்கள் (ச.தமிழ்ச்செல்வன், இரா.காமராசு, சி.அறிவுறுவோன்) பற்றியும் சோலையின் தாண்டவபுரம் நாவல் குறித்தும் அறிமுகம் செய்தார். செந்நெல், தப்பாட்டம், பெருந்திணை, மரக்கால் நாவல்கள் வரிசையில் தாண்டவபுரம் நாவல்சிறப்பாக வெளிவந்துள்ளதை குறிப்பிட்டுப் பேசிய அவர் இந்நாவல் எவரையும் எம்மதத்தையும் இழிவு செய்யவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

    தமுஎகச மாநிலக்குழுவைச் சேர்ந்த சு.தியாகராஜன் சில கேள்விகளை முன்வைத்தார். பன்னாட்டு கம்பெனிகளில் தொழிலாளர்கள் ஒடுக்கப்படுகிறார்கள், சங்கம்  வைத்துக்கொள்ளும் உரிமைகூட மறுக்கப்படுகிறது. அதைப்பற்றியெல்லாம் எழுதாமல் சைவமதத்தைப் பற்றியும் திருஞானசம்மந்தர் பற்றியும் நாவல் எழுதவேண்டிய அவசியமென்ன?  இவற்றை எப்படி முற்போக்கு என்று சொல்வது? திருஞானசம்மந்தர் மனோன்மணி உறவுச்சித்தரிப்புகள் எனக்கு ஆபாசமாகத் தொன்றுகிறது. நமது எதிரிகள் நாளை பகத்சிங் பற்றிகூடஇவ்வாறு ஒரு அவதூறான புனைவை உற்பத்தி செய்தால் நாம் என்ன செய்வது? என்று வினாக்கள் எழுப்பி இதற்கு கருத்தரங்க உரையாளர்கள் பதில் சொல்ல வேண்டுமென்ற கோரிக்கை வைத்து அரங்கில் அதிர்ச்சி அலைகளை எற்படுத்தினார்.

பின்னர் பேசிய தமுஎகச  மாநிலச் செயற்குழுவைச் சேர்ந்த கவிஞர் களப்பிரன் கடந்த இரண்டு நாட்களாக டி.செல்வராஜின் தோல், சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் ஆகிய நாவல்கள் பற்றிய கூட்டங்கள் நடைபெற்றன. இன்று சோலை சுந்தரபெருமாளின் தாண்டவபுரம் நாவல் குறித்த இக்கருத்தங்கம் நடைபெறுகிறது. வேறு எந்த அமைப்பிலும் இவ்வளவு எழுத்தாளர்கள் இருக்கவாய்ப்பில்லை என்றார்.

அவர்மேலும்பேசியதாவது:

   இந்துத்துவஅமைப்புகள், சைவமடங்கள் ஆகியவற்றின் எதிர்ப்பிற்குப் பின்னால் நாவல் விற்பனை அதிகரித்துள்ளதோடு போதிய கவனிப்பையும் பெற்றுள்ளது. தமிழையும் சைவத்தையும் காப்பாற்றும் இந்நாவல் இந்துத்துவத்தின் பக்கம் சாயும் அபாயம் இருப்பதையும் நாம் உணரவேண்டும்.

பின்னர் கருத்தரங்க உரையாற்றவந்த ஆய்வாளர் சி.அறிவுறுவோன், பரதக்கலைக்கும் சைவமதத்திற்கும் உள்ள தொடர்பை இந்நாவல் பேசுகிறது. எனது ஆசிரியரான ந.கோபாலய்யர் எழுதிய  தமிழ்நாட்டு பிராமணர்கள் என்ற நூலில் சில விஷயங்கள் காணக் கிடைக்கின்றன. தமிழ் அரசர்கள் தில்லை வாழ் அந்தணர்களிடம் முடிசூட்ட வேண்டுகின்றனர். அதற்கு அவர்கள் மறுத்து விடுகின்றனர். மதுரையில் தமிழ்ச்சங்கம் உருவான பின்னணியை இதன் மூலம் நாம் தெளிவாக உணரமுடியும்.

சிவலிங்கவழிபாடு, தேவதாசிமுறை ஆகியவற்றிற்குள்ள உறவை ஆய்வாளர் பெங்களூர் குணா தனது நூலில் குறிப்பிடுகிறார். இவரது ஆய்வை பலர் எற்பதில்லை. சிவலிங்க வழிபாடு சிந்து சமவெளியில் இருந்ததை ஆய்வாளர் பூர்ணசந்திரஜீவா ‘சிந்துவெளியில்முந்துதமிழ்’ என்ற தனது நூலில் தெளிவுபடுத்துகிறார்.

ராஜீய உறவுகளுக்கு பொதுமொழி அன்றும் இன்றும் அவசியமாக இருக்கிறது. பிராகிருதம், பாலி, தமிழ் ஆகியவற்றிற்கு எதிராக இங்கு பிராமணமொழியான சமஸ்கிருதம் பொதுமொழியாக கட்டமைக்கப்பட்ட்து. வடமொழி vs தமிழ், வருணம் vs தமிழ், சாதி vs தமிழ் ஆகிய முரண் எதிர்வுகளுக்குள் அன்றைய தமிழ்ச்சமூகம் போராடியிருக்கிறது.  இங்குதான்  நான்மறை ஓதி (ரிக், யஜூர், சாமம், அதர்வணம்ஆகியவைஅல்ல.) சிவலிங்க வழிபாட்டை திருஞானசம்பந்தர் மீட்டுருவாக்கம் செய்கிறார்.

பழங்காலத்தில் மீமாம்சம் என்றொரு பிரிவு இருந்தது. இப்பிரிவு பெருங்கடவுட்கொள்கையை எதிர்த்து உருவானதாகும். இவர்கள் சிறு தெய்வவழிபாட்டை ஆதரித்தவர்கள். அக்காலத்தில் இவர்களே கடவுள் மறுப்பாளர்கள்.

அக்காலத்தில் திணைச்சமூகமே தொல்குடி பொதுவுடமைச் சமூகமாக இருந்தது. இது ஆய்வாளர்கள் பலர் ஒப்புக்கொண்ட கருத்தாகும். அந்த வகையில் இந்நாவல் ஒரு சிறப்பான வரவு என்றார்.

இரா.தாமோதரன் தனது அறிமுக உரையில் விவசாயி தோற்றம் உடைய சி.அறிவுறுவோன் என்று சொல்லி அவரது தொடக்ககால இயக்கப்பின்னணி குறித்து விரிவாக விளக்கினார். தோற்றம் எப்படியிருப்பினும் புறப்பொருள்வெண்பாமாலை, காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டு என நீண்ட இவரது பேச்சு ஒரு தேர்ந்த தமிழ்ப் பேராசிரியரை ஒத்திருந்தது.

அடுத்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில பொதுச்செயலாளர் முனைவர் இரா.காமராசு பேசினார். அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

மணிக்கொடி எழுத்தாளர்கள் மற்றும் தி.ஜா. போன்றோர் மேட்டுக்குடி மொழியை தஞ்சை மொழியாக கட்டமைத்திருந்த நிலையில் அடித்தளமக்களின் வாழ்க்கையைமொழியை தங்களது எழுத்துகளில் வடித்தவர்களில் சி.எம்.முத்து (இடதுசாரி இயக்கத்தில் இல்லாவிட்டாலும் கூட) ,  சோலைசுந்தரபெருமாள் ஆகியோர் முக்கியமானவர்கள்.

இந்நாவலில் தான் எதிர்கொண்ட சிக்கல்கள் மற்றும் பார்வைகளாக கீழ்க்கண்ட கருத்துக்களை முன்வைத்தார்.

01.நீண்டமுன்னுரை, பின்னட்டைக்குறிப்பு, பாரதி புத்தகாலய விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்ட வாசகங்கள் போன்றவை இந்நூல்  படைப்பு என்பதைவிட ஆய்வு என்பதான தோற்றத்தை அளித்ததை உணரமுடிந்தது. படைப்பில் உருவாக்கப்படும் புனைவுகள் ஆய்வுகள் வழி உருவாவதில்லை. இங்கு உருவான சர்ச்சைகளுக்கும் இதுவும் ஒரு காரணமாகத் தோன்றுகிறது.

02.சோலையின் முந்தைய நாவல்களினின்று வேறுபட்ட மொழிநடை, பக்கங்கள் அதிகம். இருப்பினும்  இந்நாவல் திணைச் சமூகப்பண்பாட்டு அடையாளங்களைச் செம்மையாகப் பதிவு செய்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

03.சமணத்தை எதிர்த்து சைவத்தை தூக்கிப்பிடிக்கும் போக்கு.சங்கரமடம், சைவமடம் ஆகியவற்றிற்கு இடையில் எவ்வித வேறுபாடுகளும் இல்லை. பெருஞ்சமயத்தை பின்பற்றி நிற்பது வெகுமக்கள் மரபு இல்லை.  கடவுள், அரசன் ஆதிக்கம் சார்ந்த பேரடையாளங்களின் திசைவழியே மரபு-பழமை பற்றிய புரிதல்களையும் கவனிக்காமல் இருக்கக்கூடாது.

04.இந்துத்துவ ஆட்களின் மிரட்டல்களுக்கு சோலை பயப்படத் தேவையில்லை. அவருக்கு இடதுசாரி இயக்கங்கள், அமைப்புகள் என்றும் பாதுகாப்பு அரணாக துணை நிற்கும்.

இறுதியாக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் கருத்தரங்க நிறைவுரையாற்றினார்.  அந்த உரையின் சில பகுதிகள் கீழே தரப்படுகிறது.

மறுவாசிப்பு  இடதுசாரிகள்காலங்காலமாக செய்து வருவதுதான். அண்ணா கம்பரசம் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஜீவா கம்பராமாயணப் பெருமைகளை தமிழகமெங்கும் பரப்பினார். சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழிலக்கியங்களை நா.வானமாமலை, கே.முத்தையா போன்றோர் மறுவாசிப்பு செய்ததன் தொடர்ச்சியாக சோலை சுந்தரபெருமாள் இந்த  நாவலில் செய்துள்ளார்.

இந்நாவலை எதிர்ப்பவர்கள் இந்துமதத்தை, திருஞானசம்பந்தரை இழிவுபடுத்துவதாகச் சொன்னாலும் உண்மை அதுவல்ல. சோலை தன் நாவலில் திருஞானசம்பந்தரை பார்ப்பனரல்லாதவர் என்று சொன்னதே இவர்கள் எதிர்ப்பிற்கு உண்மையான காரணம். மதுரை  ஆதீனமாக  நித்தியானந்தா  நியமன  எதிர்ப்பிற்கும்  சாதிதான் காரணம்.

ஆய்விற்கு முழு உண்மை வேண்டும். புனைவுகளுக்கு நம்பத்தகுந்த உண்மைகளே போதுமானவை. சங்ககாலத்தில் இறுக்கமான மதநிறுவனங்கள் இருந்ததென்று சொல்லும்போது அதிகப்படியான தரவுகள் வேண்டும். இப்போதிருக்கிற தரவுகள் போதாது.  பக்தி இயக்கம், பக்தி இலக்கியம் குறித்து முறையான  – விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

சைவம் முற்போக்கு என்று சொல்லும் போது இவற்றிற்கு முன்னால் பின்னால்உள்ள விஷயங்களையும் நாம் பேசியாக வேண்டும். முற்போக்கு என்பதற்கு இறுதியான வரையறை அளிக்கமுடியாது. இது காலந்தோறும் மாறுபடக் கூடியது.

சோலையின் வழக்கமான மொழிநடை இதில் மாற்றம் அடைந்துள்ளது. ஆனால் இடையிடையே ‘காண்டு’ என்பது போன்ற தற்கால வழக்குகளும் உள்ளன. இவையும் வேறு சிலவும் அடுத்த பதிப்பில் திருத்தம் பெற வேண்டும்.

தென்மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட நாடார் இன மக்களுக்காகப் போராடி இயக்கம் கண்டவர் வைகுண்டசாமி. அவரைப் பற்றிய பாடத்தைப் பாடநூற்களில் சேர்க்கக் கோரியபோது அவரை மனிதனென்று சொல்லக்கூடாதென ஆதிக்க சக்திகள் எதிர்த்தன. அதைப்போல திருஞானசம்பந்தர் மனிதன் என்கிறபோதும் எதிர்ப்பு வருகிறது.

காந்தி, அம்பேத்கர், பகத்சிங் போன்ற அனைவரையும் இன்று இந்துத்துவசக்திகள் கபளிகரம் செய்து வருகின்றன. இவர்களைப் பற்றி நிறைய அவதூறுகள் ஏற்கனவே பரப்ப்ப்பட்டுள்ளன. மேலும் அவதூறுப் படைப்புகள் வந்தால் கருத்து சுதந்திரம் என்ற நிலையில் தான் நாம் அவற்றை அணுகவேண்டும்.

இந்தியாவில் சாதீயம் குறித்து அம்பேத்கர்,  இ.எம்.எஸ்.,  சுவிராஜெய்ஸ்வால்,  கெய்ல்ஓம்வெத் போன்றோர் பல்வேறு ஆய்வுகளைச் செய்துள்ளனர். இவற்றின் பின்புலத்தில் பெரியார் செய்த கடவுள் குறித்தான ஆய்வுகளையும் நாம் தொடர வேண்டும்.

தமுஎகசவில் அருணன் தனது நாவலில் ஒரு கருத்தைச் சொல்கிறார். அதற்கு மாறான கருத்தை சோலை தாண்டபுரத்தில் சொல்கிறார். இருவரையும் ஒரே மேடையில் வைத்து விவாதிக்க வேண்டும்.

இந்நாவலில்சைவத்தைஉயர்த்திப்பிடிக்கும்போக்குஉள்ளது. இதுகுறித்துவிரிவானஆய்வுகள்செய்துஅடுத்தபதிப்பில் உரிய திருத்தம் பெறவேண்டும்.  இது எனது சொந்தக்கருத்து.  சங்கத்தின் கருத்தல்ல. சங்கம் எப்போதும் கருத்து சொல்லாது.

சோலை மிரட்டல்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட பயப்படத் தேவையில்லை. தமுஎகச அவற்றை எதிர்கொள்ளும். அவை நீதிமன்ற வழக்காயினும் நேரடித்தாக்குதலானாலும் தமுஎகச எப்போதும் சோலையுடனிருக்கும்.

நிறைவாக ஒரு சில வார்த்தைகள் கூறுமாறு சோலை மேடைக்கு அழைக்கப்பட்டார். அவர் தான் தொலைபேசியில் மிரட்டப்பட்ட நிகழ்வை எடுத்துரைத்தார். இன்னும் ஆய்வுகள் செய்ய தன்னுடைய உடல்நலம் ஒத்துழைக்கவில்லை என்றார்.

தான் இந்நாவலில் சைவமதத்தை ஒருபோதும் உயர்வாக சித்தரிக்கவில்லை என்றும் சொன்னார். எத்தகைய எதிர்ப்புகள் வந்தபோதும் ராஜராஜன் காலத்திய சைவ வரலாற்றைப் பேசும் எனது நாவல் வந்தே தீரும்என்றார் உறுதியாக.  வருகின்ற எனது அடுத்தநாவலான  ‘பால்கட்டு’ – விலும் என் முன்னோர்களின் கதையைத்தான் சொல்லியிருக்கிறேன். எனது பாட்டி சொன்ன பல கதைகள் இன்னும் எழுதப்படவில்லை என்றும் சொல்லி நிறைவு செய்தார்.

நிறைவாக தமுஎகச மாவட்டப்பொருளாளர் இரா.உமாநாத் நன்றி கூறினார். இக்கருத்தங்கில் பேரா.சிவராமன், பேரா.தி.நடராசன், பேரா.கோ.காண்டீபன், கருக்கல் இதழாசிரியர் அம்ராபாண்டியன், எழுத்தாளர்உத்தமசோழன், அறிவியல் இயக்கம் சந்திரசேகரன், மு.சவுந்தர்ராஜன் மற்றும் தமுஎகச தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Share:
  • Add to favorites
  • email
  • Facebook
  • Google Bookmarks
  • Google Buzz
  • PDF
  • Twitter
  • Yahoo! Buzz
புதுச்சேரி ரவுடி துப்பாக்கியால் சுட்டுக் கைது:
உண்மை அறியும் குழு அறிக்கை
                                                                                                                                                                                                                                          புதுச்சேரி
                                                                                                              மே 1, 2012
    சென்ற ஏப்ரல் 24 இரவு வில்லியனூர் அருகிலுள்ள உறுவையாறு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேலு த/பெ ஆறுமுகம் என்கிற இளைஞனை ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் சென்ற காவலர்கள் குழு ஒன்று துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது. இதற்கு இரண்டு நாட்கள் முன்னர் சக்திவேல் மற்றும் அவரது கூட்டாளிகளான வாணரப்பேட்டை வினோத், முதலியார்பேட்டை பீட்டர், நித்தியானந்தம் ஆகியோர் கரிக்கலாம்பாக்கம் – பெருங்கலூர் சாலையில் வந்து கொண்டிருந்த அவ்வூரைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரை நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசிக் கொன்றுள்ளனர். ஜெகதீசனுடன் வந்து கொண்டிருந்த அவரது நண்பர் துரைசாமி குண்டு வீச்சில் காயமடைந்தார்.
   இதில் மிகவும் பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவெனில் கொல்லப்பட்ட கூலித் தொழிலாளியான ஜெகதீசனுக்கும் கொன்ற கும்பலுக்கும் பகை ஏதுமில்லை, இந்த ரவுடிக் கும்பலுக்கும் இவர்களுடனிருந்து பிரிந்த தேவதாஸ் என்பவரின் கும்பலுக்கும் பகை இருந்துள்ளது. தொடர்ந்து இவர்களுக்குள் மோதல்கள் நடந்துள்ளன. தேவதாசைக் கொல்லச் சென்றவர்கள் தவறுதலாக தேவதாஸ் என நினைத்து இரு குழந்தைகளுக்குத் தந்தையான அப்பாவி ஜெகதீசனைக் கொன்றுள்ளனர்.
    வழக்கை காவல் கண்காணிப்பாளர் பைரவசாமி மேற்பார்வையில் ஆய்வாளர் பாஸ்கரன் விசாரித்து வந்தார். காவல் துறையின் கூற்றுப்படி வினோத், பீட்டர் முதலானோர் முதலில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்து சக்திவேல் பற்றி அறிந்து அவரைத் தேடி வந்தனர். 24 இரவு அவரைத் தேடிச்சென்று உறுவையாறு  ஆற்று கல்வெர்ட் அருகில் முட்புதர் ஒன்றில் அவரைக் கண்டனர். கைது செய்ய முனைந்தபோது சக்திவேல் வெடிகுண்டு ஒன்றை காவல்துறையினர் மீது வீசியதில் அவர்கள் சென்ற பொலேரோ ஜீப் மற்றும் உதவி ஆய்வாளர்கள் முத்துக்குமார், ஃபெலிக்ஸ் ஆகியோர் படுகாயமடைந்தனர். இரண்டாவது குண்டை சக்திவேல் வீச முற்படுகையில் பாஸ்கரன் சுட்டதில் சக்திவேல் படுகாயமடைந்து பிடிபட்டார்.
  சக்திவேலுக்குக் கால்களில் மூன்று குண்டுகள் பாய்ந்துள்ளன. முழங்கால்கள் உடைந்து மருத்துவமனையில் உள்ளார்.
   போலீசாரின் இந்தக் கதைக்கும் பத்திரிக்கைகளில் வந்த ஒரு செய்திக்குமுள்ள ஒரு முரண்பாடு எங்களின் கவனத்திற்கு வந்தது. வினோத், பீட்டர் ஆகியோரோடு சக்திவேலையும் சம்பவம் நடப்பதற்கு முன்பே போலீஸ் கைது செய்து வைத்துள்ளதாகவும் நித்தியானந்தம் என்பவரை மட்டுமே தேடி வந்ததாகவும் தினத்தந்தி இதழில் செய்தி வந்துள்ளது. கைது செய்து வைத்துள்ள ஒருவரை ‘என்கவுன்டர்’ செய்யப்போவதாகப் புதுச்சேரி நகரத்தில் 23ந் தேதி மாலையே பேச்சுக்கள் இருந்தன. இந்நிலையில் இப்படியான ஒரு துப்பாக்கிச்சூடு குறித்துப் பல அய்யங்கள் எங்களுக்கு ஏற்பட்டன. கொள்ளையர், ரவுடிகள் ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரித்துத் தண்டனை வழங்காமல் துப்பாக்கியால் சுட்டுச் சாகசங்கள் புரிவதும் வீரப்பரிசுகள் பெறுவதும் ஒரு கலாச்சாரமாகவே ஆகிப் போன இன்றைய சூழலில் இது குறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்ட மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தோம்.
  1. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை
  2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி
  3. பி.வி. ரமேஷ், மக்கள் பாதுகாப்புக் கழகம், விழுப்புரம்
  4.  மு. சிவகுருநாதன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், திருவாரூர்
  5. இரா. பாபு, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, கடலூர்
  6. சு. காளிதாஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி
     இக்குழு நேற்று முழுவதும் புதுச்சேரி, வில்லியனூர், உறுவையாறு கரிக்கலாம்பாக்கம் முதலான பகுதிகளுக்குச் சென்று சக்திவேலின் தாயார் வசந்தா (50), சித்தப்பா கிருஷ்ணன், அண்ணன் சத்தியன், கரிக்கலாம்பாக்கம் பெருங்கலூரைச் சேர்ந்த கொல்லப்பட்ட ஜெகதீசனின் மனைவி பேபி அவரது குழந்தைகள் மர்றும் உறவினர்கள் ஆகியோரைச் சந்தித்தது. பின்னர் காவல் கண்காணிப்பாளர் பைரவசாமி, குண்டு வீச்சில் காயம்பட்டதாகச் சொல்லப்படும் உதவி ஆய்வாளர் ஃபெலிக்ஸ் ஆகியோரையும் சந்தித்து விரிவாகப் பேசியது. குண்டு வீச்சும் துப்பாக்கிச் சூடும் நடைபெற்றதாகச் சொல்லப்படும் சம்பவ இடத்தையும் சென்று பார்வையிட்டது. துப்பாக்கியால் சுட்ட ஆய்வாளர் பாஸ்கரனுடன் தொலைபேசியில் அய்யங்களைக் கேட்டுக் கொண்டது.
எமது பார்வைகளும் அய்யங்களும்
  1.    இரு ரவுடிக் குழுக்கள் இப்பகுதியில் உலவி வந்துள்ளன. இவர்களுக்குள் கடந்த இரு வாரங்களாகவே சண்டைகள் நடந்து வந்துள்ளன. கொலை நடப்பதற்கு இரு நாட்கள் முன்னதாக தேவதாஸ் கும்பல் சக்திவேலைக் கத்தியால் கீறியுள்ளது. சக்திவேல் உள்ளிட்ட கும்பல் தேவதாசைக் கொல்லத் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி அதில் அப்பாவிக் கூலித் தொழிலாளி ஜெகதீசன் கொல்லப்பட்டது உண்மை. இதைச் சக்திவேல் குடும்பமே ஒத்துக் கொள்கிறது.
  2.  சக்திவேல் ஏற்கனவே இதுபோன்ற ஒரு வழக்கில் சிக்கித் தண்டனை அனுபவித்தவர். மேலும் இரு வழக்குகளும் அவர் மீது உள்ளன. வெடிகுண்டு செய்கிற அளவுக்குத் தேர்ந்த இரு குழுக்கள் இப்பகுதியில் உலவி வருவதை போலீசார் இதுவரை கண்டுகொள்ளாதது வருந்தத்தக்கது.
  3.   நாங்கள் விசாரித்த வகையில் ஜெகதீசன் கொலை செய்யப்பட்ட அடுத்தடுத்த நாளில் போலீசுக்கு ஆதரவான ஒரு வழக்குரைஞர் மூலமாக சக்திவேல் காவல்துறையிடம் சரணடைந்துள்ளார். சக்திவேலுவின் தாய், சகோதரர், சித்தப்பா முதலியோர் இதை உறுதி செய்கின்றனர்.
  4. சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் இடத்திற்குச் சென்று நாங்கள் நுணுக்கமாகத் தேடிப் பார்த்தோம். குண்டு வெடிப்பு முதலானவற்றிற்கு எந்த ஆதாரமும் அங்கில்லை. பகுதி மக்களும் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடுச் சத்தங்கள் ஏதும் கேட்கவில்லை என்கின்றனர்.
  5.  குண்டு வெடிப்பில் ‘சேதம்’ அடைந்ததாகச் சொல்லப்படும் போலீஸ் வாகனத்தைப் பார்த்தோம். அதில் எந்தப் பாதிப்பும் இல்லை. குண்டு வீச்சால் ‘படுகாயம்’ அடைந்ததாகச் சொல்லப்படும் ஆய்வாளர்கள் ஃபெலிக்ஸ் ,மற்றும் முத்துக்குமார் இருவரும் இன்று வேலைக்குத் திரும்பிப் பணியில் உள்ளனர். ஃபெலிக்சுடன் விரிவாகப் பேசிக் கொண்டிருந்தோம். அவரது உடம்பில் குண்டுக் காயம் பட்டதற்கான தடயம் ஏதுமில்லை. கார் பம்பரில் குண்டு பட்டுத் தெறித்தது என்கின்றனர். பிறகு உள்ளே இருந்த அதிகாரிகள் படுகாயமடைந்தனர் என்கின்றனர். இவை முரணாக உள்ளன.
  6. முதல் குண்டு வீசி அது வெடித்துக் காயமேற்படுத்தியபின் இரண்டாவது குண்டை வீச முற்பட்டபோதுதான் துப்பாக்கியால் சுட்டோம் எனக் காவல்துறையினர் கூறுகின்றனர். அப்படியானால் அந்த இரண்டாவது குண்டைக் கைப்பற்றி செயலிழக்கச் செய்து பாதுகாக்கப்படுகிறதா எனக் கேட்டவுடன் அதுவரைக்கும் விரிவாகப் பேசிக் கொண்டிருந்த ஆய்வாளர் பாஸ்கரன் இதையெல்லாம் நான் உங்களிடத்தில் சொல்லத் தேவையில்லை எனக் கூறி முடித்துக் கொண்டார். கண்காணிப்பாளர் பைரவசாமியாலும் இதைச் சரியாக விளக்க முடியவில்லை. சம்பவம் குறித்து அவரிடம் கேட்டபோது அப்படித்தான் பாஸ்கரன் சொல்லுகிறார் என்றே கூறினார்.
  7.  வெடிகுண்டுகள் செய்வதில் கை தேர்ந்தவராகச் சொல்லப்படுகிற சக்திவேலுவின் வீடு இதுவரை சோதனை செய்யப்படாதது வியப்பாக உள்ளது.
எமது கோரிக்கைகள்
  1.  இப்பகுதியில் நீண்ட நாட்களாகச் செயல்பட்டு வந்த ரவுடிக் கும்பல்களைக் கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படாததே இன்றைய சம்பவங்களுக்குக் காரணம். இரண்டு கும்பல்களைச் சேர்ந்த இதரர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்குக் காவல்துறை முன்னுரிமை அளிக்க வேண்டும்.
  2.   ஆள்மாறாட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட கூலித் தொழிலாளி ஜெகதீசன் குடும்பத்திற்கு  அரசு இதுவரை எந்த உதவியும் செய்யாதது வருந்தத்தக்கது. ஆறாவது வகுப்புவரை படித்த அவரது மனைவி பேபி, மூன்றரை வயதுப் பெண்குழந்தை சரண்யா, பிறந்து 10 நாட்களே ஆன இன்னொரு ஆண் குழந்தை ஆகியோர் இன்று அனாதைகள் ஆகியுள்ளனர். பேபிக்கு அவரது தகுதிக்கேற்ற ஒரு அரசு வேலை அளிக்க வேண்டும் எனவும் அக்குடும்பத்திர்கு 10 இலட்ச ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் எனவும் மாநில அரசை வற்புறுத்துகிறோம்.
  3.   குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச்சூடு தொடர்பாகப் போலீஸ் சொல்லுகிற கதையில் பல அம்சங்கள் நம்பத் தகுந்ததாக இல்லை. சரணடந்த சக்திவேலைக் கொண்டு சென்று சுட்டுள்ளனர் என்றே நாங்கள் கருதுகிறோம். இது தொடர்பான விசாரணையைப் புதுச்சேரி போலீசிடம் ஒப்படைத்தால் உண்மைகள் வெளிவராது என்பதால் இவ்விசாரணை சி.பி.ஐக்கு மாற்றப்பட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் பங்குபெற்ற அதிகாரிகள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.
இறுதியாக

   எங்கள் குழு நேற்று உறுவையாறு சென்று விசாரித்துக் கொண்டிருந்தபோது கணுவாப்பேட்டை ரமேஷ் என்பவர் தலைமையில் வந்த ஒரு கும்பல் எங்களை வழிமறித்து முற்றுகையிட்டுத் தாக்க முயற்சித்தது. ஜெகதீசன் கொலை செய்யப்பட்டதைச் சரி எனச் சொல்வதற்காக நாங்கள் வந்திருப்பதாகக்  கரிக்கலாம்பாக்கம் பெருங்கலூர் பகுதி மக்களிடம் பொய்கூறி அவர்களை உணர்ச்சிவயப்படச் செய்து ஒரு டாடா ஏஸ் வேனில் ஏற்றி வந்து கலாட்டா செய்தனர், நாங்கள் சென்றிருந்த டாடா சுமோ காரின் (டி.என்.31, ஏசி 0154) முன்பக்கக் கண்ணாடியை (wind screen) உடைத்து நொறுக்கினர். பாதுகாப்புக் கோரி நாங்கள் அப்பகுதி ஆய்வாளர் பாஸ்கரனையும் எஸ்.எஸ்.பி ஸ்ரீகாந்த் ஆகியோரைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் செல்பேசியை எடுக்கவேயில்லை. எல்லாம் முடிந்த பின்பே ஆய்வாளர் ஃபெலிக்ஸ் அவ்விடத்திற்கு வந்தார்.
எங்கள் பயணம் வெளிப்படையானது. முன்னதாக நாங்கள் அறிவித்தே இப்பகுதிக்குச் சென்றோம். காவல் துறையினர் முன்னதாகச் சென்று எங்களுக்கு எதிராக இப்படியான ஒரு வன்முறையைச் செய்யத் தூண்டியதாக எங்களுக்குச் செய்திகள் கிடைத்துள்ளன.
ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்குக் கருத்து வேறுபாடு கிடையாது. யாராக இருந்தபோதும் பிடித்துச் சட்டப்படி விசாரிக்க வேண்டும். போலீசே சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு தண்டனை அளிப்பதை நீதியில் அக்கறை உள்ள யாரும் ஏற்க முடியாது. அப்படியாயின் பின் நீதிமன்றங்கள் எதற்கு? சரணடைந்த ஒருவரைச் சுட்டு நிரந்தர முடமாக்குவதை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். இது தொடர்பான உண்மைகளைக் கண்டறிய முயல்கிறோம்.
நமது நாடு ஐ.நா அவையின் Human Rights Defenders தொடர்பான அறிக்கையில் கையெழுத்துட்டுள்ள நாடு. இதன்படி மனித உரிமை காப்பாளர்களாகிய எங்களைப் போன்றோருக்கு அரசு பாதுகாப்பு அளிக்கவும், தேவையான விவரங்களைத் தரவும், எங்களின் விவர சேகரிப்பிற்கு உதவி செய்யவும், இது தொடர்பான எங்களின் பிரச்சாரங்களைத் தடை செய்யாமலிருக்கவும் வேண்டும்.
தவிரவும் சென்ற ஆண்டு இறுதியில் இது போன்ற ஒரு மனித உரிமைச் செயல்பாட்டுக்கு எதிராகத் தடை முயற்சி ஒன்றைத் தமிழகக் காவல்துறை மேற்கொண்டபோது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அம்முயற்சியைக் கண்டித்து முறியடித்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம் (Writ petition MD No: 12208 of 2011 and MP (MD) Nos 1 & 2 of 2011 Dated 21-10-2011). இத் தீர்ப்பை வழங்கிய நீதியரசர். இராமசுப்பிரமணியம் அவர்கள் இது போன்ற மனித உரிமை அமைப்புகள் மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிக் கொணர்வதில் ஆற்றியுள்ள பங்கைக் குறிப்பிட்டதோடு, இது போன்ற மனித உரிமைச் செயற்பாடுகளை ஒரு “மூன்றாவது விசாரணை முகமை ”Third investigation agency) எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முதல் உண்மையறியும் குழுவை அமைத்து அறிக்கை வெளியிட்டவர் மகாத்மா காந்தி அடிகள். ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் தொடர்பாக அவர் தலைமையில் சென்று அளித்த உண்மை அறியும் குழு அறிக்கை உலகப் புகழ் பெற்றது.
ஆனால் தமிழக மற்றும் புதுவைக் காவல்துறையினர் மனித உரிமை முயற்சிகளை முறியடிக்க இது போன்ற சதிகளிலும் சட்ட விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது மிகவும் வருந்தத்தக்கது. நேற்று நடந்த சம்பவம் குறித்து புகார் ஒன்றைக் காவல்துறையிடம் அளித்துள்ளோம். இது குறித்து முறையாக விசாரித்துக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இது குறித்து நேரடிக் கவனம் செலுத்துமாறு முதல்வர் ரங்கசாமி அவர்களைக் கோருகிறோம்.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.
அலுவலகம்: 179-அ, (மாடி), மகாத்மா காந்தி வீதி, புதுச்சேரி- 605 001.

பேச: 98940 54640

Share:
  • Add to favorites
  • email
  • Facebook
  • Google Bookmarks
  • Google Buzz
  • PDF
  • Twitter
  • Yahoo! Buzz

தேர்வில் காப்பியடிக்கும் கலாச்சாரம் : யார் காரணம்? என்ன செய்யலாம்?

                                                                      
                                                                                                                  – மு. சிவகுருநாதன்
      தேர்வு முறைகள் தொடங்கியதிலிருந்தே காப்பியடிக்கும் பழக்கமும்
தொடங்கியிருக்க வேண்டும்.  இங்கொன்றும் அங்கொன்றுமாக நடைபெறும் சிறு நிகழ்வுகள் இப்போது பூதாகரமாக உருவெடுத்திருக்கின்றன.  மாணவர்கள்  பார்த்து கேட்டு எழுதுவதை கண்டு கொள்ளாமலிருப்பது, மாணவர்களுக்கு பிட்  சப்ளை செய்வது, நன்றாக படிக்கும் மாணவனின் விடைத்தாளை தேர்வறையில் உள்ள  அனைவருக்கும் வழங்குவது, அறைக்கண்காணிப்பாளர்களே சொல்லித் தருவது,  குறிப்பிட்ட பாட ஆசிரியரிடமிருந்து குறுஞ்செய்தி (SMS) மூலம் விடைகள் அனுப்பப்பட்டு  அவற்றை மாணவர்களுக்கு அளிப்பது என காப்பியடிக்கும்  கலாச்சாரம் கல்வித் துறையில் வெகு வேகமாக வளர்ந்துள்ளது.

இந்த வகையில் பத்தாம் வகுப்பு கணித வினாத்தாளுக்குரிய விடைகள்
நகலெடுக்கப்பட்டு (XEROX) விநியோகிக்கப்பட்ட நிகழ்வு திருவண்ணாமலை
மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் (இந்த மெட்ரிக்
முகமூடியை எப்போது கழற்றுவார்கள் என்று தெரியவில்லை) நடந்துள்ளது.
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் குறுஞ்செய்தி மூலம் விடைகளை அனுப்பிப் பெற்றளித்த ஆசிரியர் அறைக் கண்காணிப்புப் பணியிலிருந்து
விடுவிக்கப்பட்டார்.  அவர் அடுத்த தேர்வில் வேறு மாற்று வழியை

கையாளக்கூடும்.

அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் அடிக்கடி வினாத்தாளகள் முன்கூட்டியே நகலெடுத்து விற்பனை செய்யப்படுகின்றன. வினாத்தாள் முன் கூட்டியே வெளியாவது, தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவது போன்றவற்றை ஒழிக்க முடியாது என்று  சொல்வதற்கில்லை.  அதிகாரவர்க்கம் இவற்றின் மூலம் பெரும் பயனடைகிறது  என்பதே உண்மை.  தேர்தல் முறைகேடுகளைப் போல தேர்வு முறைகேடுகளும் ஒருவர்  மற்றவரைக் குறை சொல்வதற்கு பயன்படுத்துவார்களே தவிர எந்தத் தரப்பும் அவற்றில் ஈடுபடாமலிருப்பது இல்லை.

ஒரு நேர்மையான மாவட்ட ஆட்சியர் தனக்கு வந்த மின்னஞ்சல் புகாரை
புறக்கணிக்காமல் மேற்கொண்ட நடவடிக்கையால் இந்நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  பள்ளி அலுவலகத்திலேயே விடைகள் நகலெடுக்கப்பட்டது.  அறைக் கண்காணிப்பாளர்களிடம் விடைத் துண்டுகள் இருந்தது,  செல்போன் மூலம்  தேர்வின் போது உரையாடியது, அவர்களின் சட்டைப்பையிலிருந்து பறிமுதல்  செய்யப்பட்ட கவர் பணம் போன்றவை ஊடகத்தின் பார்வைக்கு வந்துள்ளன. தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் இதைப் போல செயல்பட்டால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் பிடிபடும் என்பதில் அய்யமில்லை.

அடிக்கடி மறதி நோய்க்காட்படும் ஊடகங்களுக்கும் மக்களுக்கும் இதே
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2008-ல் நடந்த நிகழ்வை நினைவுப்படுத்துவது  மிகப் பொருத்தமாக இருக்கும்.  முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு நடத்திவரும் ஜீவா – வேலு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இவ்விதம் முறைகேடுகளில் ஈடுபட்டு  100/100 தேர்ச்சி விழுக்காட்டைப் பெற்றுவந்த நிலையில் 2008 மார்ச் பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கந்தசாமி, நேர்முக  உதவியாளர் சக்கரபாணி, திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பரசுராமன், ஆரணி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி  வேதியியல் ஆசிரியர் பரிமளா ஆகியோர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் தேர்ச்சி விழுக்காடு 67% ஆகக் குறைந்தது.

    இதனைத் தொடர்ந்து அப்போதிருந்த  தி.மு.க. அரசு முதன்மைக் கல்வி அலுவலர் கந்தசாமியை தூத்துக்குடிக்கும் நேர்முக உதவியாளர் சக்கரபாணியை ராமநாதபுரத்திற்கும் தலைமையாசிரியர்  பரசுராமனை ஒட்டப்பிடாரத்திற்கும் வேதியியல் ஆசிரியை பரிமளாவை  நாமக்கல்லுக்கும் இடம் மாற்றம் செய்து பழி தீர்த்துக் கொண்டது.  கும்பகோணம் தீ விபத்திற்குப் பிறகு கல்வி அதிகாரிகள் எடுக்கப்பட்ட  இரண்டாவது பெரிய நடவடிக்கை இதுவாக இருக்கக்கூடும்.

இத்தகைய நிகழ்வுகள் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்.  28.02.2009 அன்று விழுப்புரத்தில் கூடிய மக்கள் கல்வி கூட்டமைப்பு காப்பியடிக்கும் கலாச்சாரத்தை ஒழித்துக் கல்வித் தரத்தை  உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதையும்  இங்கு குறிப்பிட வேண்டும்.

(பார்க்க: தமிழகப் பள்ளிக் கல்வி பிரச்சினைகளும் தீர்வுகளும் 
(தொ) பேரா. பிரபா. கல்விமணி
 - மக்கள் கல்விக் கூட்டமைப்பு வெளியீடு)

இந்த மாதிரி நிகழ்வுகள் ஏற்படும் போது அனைவரும் வாய்க்கு வந்தபடி
கருத்துக்களை உதிர்ப்பது வாடிக்கையாகி விடுகிறது.  18.04.2012 அன்று
தினமணி தலையங்கம் இம்முறைகேடுகளுக்குக் காரணம் அரசுப் பள்ளிகள் என்று  சொல்கிறது.  இந்த தனியார் பள்ளியில் காப்பியடிக்கத் துணை போனவர்கள்  அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றும், அவர்கள் பள்ளிக்கே வராமல்  மாணவர்களுக்குத் தேர்ச்சி அளிக்க இம்மாதிரியான முறைகேடுகளுக்குத் துணை  போவதாகவும் கண்டுபிடித்துள்ளது.

முறைகேடுகளில் யார் ஈடுபட்டாலும் அவர்களைக் கண்டிக்க வேண்டியது  நடுநிலையாளர்களின் கடமை.  அதற்கு இவர்கள்தான் காரணம் என்று முத்திரை  குத்துவதை ஏற்கமுடியாது.  மனிதன் தவறு செய்வது வாடிக்கையானது.  அந்த தவற்றைச் செய்யத் தூண்டுபவர்களை கண்டு கொள்ளாமல் விடுவது சரியா?

மாவட்ட ஆட்சியரின் நேரடிப் பார்வையிடலின் போது அப்பள்ளி அலுவலகத்திலேயே  விடைகள் நகல் எடுக்கப்பட்டது, வகுப்பறையில் அறைக் கண்காணிப்பாளர்கள்  பையில் பணம், கத்தை கத்தையாக விடைத் துண்டுகள், அவர்களிடையேயான செல்போன்  உரையாடல்கள் ஆகியவை நடந்து பலர் கையும களவுமாக பிடிபட்ட போது இங்கு  என்னவிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது?

அந்தத் தனியார் பள்ளி அலுவலர்கள் விடுப்பில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.  துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் தொடர்ந்து பணிபுரிந்தனர்.  அறைக் கண்காணிப்பாளர்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள்  மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கைக்கு ஆணையிடப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.

இந்த 7 பேரின் நடத்தை மிக இழிவானது.  இதற்குரிய தண்டனை அளிக்கப்பட்டாக வேண்டும். ஆனால் இதற்கு உதவி புரிந்த அப்பள்ளி நிர்வாகம், அலுவலர்கள்,  கல்வி அதிகாரிகள், அலுவர்கள், துறை அலுவலர்கள், பறக்கும் படையினர் என அனைத்துத் தரப்பினரும் உரிய விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  ஆனால் இங்கு என்ன நடக்கும்?  கூடிய  விரைவில் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவார் என்பதை  மட்டும் இப்போது அனுமானிக்கலாம்.

மாவட்டக் கல்வி அலுவலகம் தேர்வுப் பணிக்கு ஆசிரியர்களை நியமிக்கிறது. பல தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியில் இவர்களை மட்டும் நியமிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது.  அப்பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டு துறை அலுவலர், அறைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை உள்ளிட்டவர்கள்  நியமிக்கப்படுகின்றர்.  தேர்வு நடைபெறும் காலங்களில் அவர்களுக்கு நல்ல கவனிப்பு செய்யப்படுகிறது.  தேநீர், வடை அளித்தாலே மாணவர்கள்  காப்பியடிப்பதை கண்டு கொள்ளாமல் இருக்கும் ஆசிரியர்களும் இருக்கத்தான்செய்கிறார்கள்.  நேர்மையாக செயல்படும் ஒரு சிலரும் நமக்கேன் வீண் வம்பு  என்று நினைத்து பேசா மடந்தையாகி விடுகின்றனர்.  அம்மணமாக இருக்கும் ஊரில்  கோவணம் கட்டுபவன் பைத்தியக்காரன் என்ற நிலைதான் இவர்களுக்கு.

அரசுத் தேர்வு முறைகேடுகளுக்கு கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை
உள்ள அனைத்து வகையான அலுவலர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி
நிர்வாகங்கள், தனிப்பயிற்சி நடத்துவோர்   (Private Tuition Centres), அரசியல்வாதிகள்,  உள்ளூர் பெரும் பணக்காரர்கள் என்று பல்வேறு
தரப்பினருக்கும் இதில் பங்குண்டு.  இதில் ஏதேனும் ஒரு தரப்பை மட்டும்
குறை சொல்லி தப்பித்துக் கொள்வது இம்முறைகேடுகள் ஆண்டுதோறும் தொடர்வதை  ஊக்குவிப்பதாகும்.

மாவட்ட ஆட்சியர் இம்முறைகேட்டை கையும் களவுமாக பிடிக்கும்போதே அவர்கள் ஏன் கைது செய்யவில்லை?  கிராம நிர்வாக அலுவலர் ரூ. 100/- பெற்றாலே கைது  செய்பவர்கள், இம்முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது மட்டும் துறைரீதியான  நடவடிக்கைகள், விடுப்பில் செல்ல பரிந்துரைத்தல் என்ற மயிலிறகு சீண்டல்கள்  ஏனென்று தெரியவில்லை.  புதுச்சேரி கல்வியமைச்சர் கல்யாணசுந்தரம் தேர்வு  முறைகேட்டில் ஈடுபட்டதற்கு தமிழக காவல்துறை பல மாதங்கள் தேடியதே….  ஆனால் கையும் களவுமாக பிடித்த போது ஏன் கைது நடவடிக்கை இல்லை?  இதன் மூலம் பலரைக் காப்பாற்ற மாவட்ட ஆட்சியர் கைகள் கட்டப்பட்டிருப்பது
புலனாகிறது.

யாரும் செயல்படுத்தப் போவதில்லை என்றாலும் வழக்கமான நமது பரிந்துரைகளை கீழே தருகிறேன்.

01. தேர்வில் காப்பியடிக்க உதவும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள்
போன்றவர்களுக்கு துறை ரீதியான தண்டனைகளைத் தவிர்த்து பணிக்காலம்
முழுமைக்கும் தேர்வுப் பணிக்கு லாயக்கற்றவர்கள் என்று அறிவிக்கலாம்.
இதைப் போலவே விடைத்தாள் திருத்தும் பணியில் முறைகேடு செய்பவர்களை  பணிக்காலம் முழுமையும் திருத்தும் பணியிலிருந்து விடுவிக்கலாம்.  தேர்தல்  பணிகளில் முறைகேடு செய்பவர்களை பணிக்காலம் முழுமைக்கும் தேர்தல் பணியாற்ற  தடை விதிக்கலாம்.

02. முறைகேடுகளில் ஈடுபடும் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்தல்.
பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு மாற்றுப் பள்ளிகளில் சேர்க்க
வாய்ப்பில்லை என்றால் குறைந்தபட்சம் தேர்வு மையத்தையாவது ரத்த செய்ய வேண்டும்.

03. இப்போது பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் சில குறிப்பிட்ட  பாடங்களுக்கு மட்டும் முதன்மைக் கண்காணிப்பாளராக வேறு பள்ளியின் தலைமையாசிரியர்  நியமனம் செய்யப்படுகிறார்.  இது பத்தாம் வகுப்பு உள்ளிட்ட அனைத்து அரசு பொதுத்தேர்விற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

04. ஒரு பள்ளியில் தேர்வு நடக்கும்போது அப்பள்ளியின் தாளாளர்,
தலைமையாசிரியர், ஆசிரியர்கள், எழுத்தர், அலுவலக உதவியாளர்கள் யாரும் அங்கு பணியில் இருக்கக் கூடாது என்ற நிலை வேண்டும்.

05. ஒரு குறிப்பிட்ட பள்ளிக்கு சில குறிப்பிட்ட நபர்களையே தேர்வுப்
பணிக்கு அமர்த்துவதை கண்காணித்துத் தடை செய்ய வேண்டும்.

06. பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து ஆசிரியரல்லாத பறக்கும் படை
உருவாக்கப்பட வேண்டும்.  100% தேர்ச்சி காட்டும் பள்ளிகள் தனிக்
கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும்.

07. பள்ளித் தேர்ச்சி 100% எனக்காட்டுவதற்கும் சில குறிப்பிட்ட
பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுப்பதற்கு தனிப்பட்ட மாணவர்களுக்கு சில
கல்வித் தொழிலகங்கள் (?!) உதவி புரிகின்றன.  இவற்றையும் தடுக்க வேண்டும்.

08. தேர்வறைகளில் செல்போன் முற்றிலும் தடை செய்யப்பட்டு, வெப் கேமரா
பொருத்தப்பட வேண்டும்.

09. பன்னிரண்டாம் வகுப்பு கணினித் தேர்வு போல ஒரு மதிப்பெண்
வினாக்களுக்கு OMR  தாள்கள் மூலம் பதிலளித்து ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள்  மாணவர்களிடமிருந்து விடைத்தாளை திரும்பப் பெறலாம்.

10. தொடக்கக் கல்வியை சீர்படுத்தாமல் 10, 12 வகுப்புக்களில் முழுத்
தேர்ச்சி பெற வேண்டுமென அரசுப் பள்ளிகளுக்கு அரசும் அரசு அதிகாரிகளும்
கெடுபிடிகள் செய்வது நிறுத்தப்பட வேண்டும்.  அரசுப் பள்ளித் தேர்ச்சியை
தனியார் பள்ளியுடன் ஒப்பிடும் போக்கு நிறுத்தப்பட வேண்டும்.  அரசு,
அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊடகங்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினரும் மாணவர்கள் மீது தொடுக்கும் தேர்வுகள் தொடர்பான உளவியல் தாக்குதல்கள் முடிவுக்கு வர வேண்டும்.

தேர்தல் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறும் போது ஆசிரியர் அல்லாத  பிற துறைப் பணியாளர்களைக் கொண்டு தேர்தல் நடத்துவது, வெளி மாநில  போலீசாரைப் பயன்படுத்துவது, ராணுவம் அல்லது துணை ராணுவத்தைப்  பயன்படுத்துவது என்றெல்லாம் கோரிக்கை வைக்கப்படுவதைப் போல இங்கும்  தேர்வுப் பணிகளை ஆசிரியர்களைத் தவிர்த்துப் பிற துறை பணியாளர்களை வைத்து  அரசுத் தேர்வுகளை நடத்தலாம் என்றொரு யோசனையும் முன் வைக்கப்பட வாய்ப்பு
உண்டு.  ஆனால் அது இன்னும் பல்வேறு மோசடிகளுக்கு வழி வகுக்கும் என்பதில் அய்யமில்லை.

பல வேலைகள் செய்வதை விட கீழ்க்கண்ட இரண்டில் ஏதேனும் ஒன்று செய்தாலே இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

* இப்போதுள்ள மனப்பாடத் தேர்வு முறையை முற்றிலும் ஒழித்து
   மேம்படுத்தப்பட்ட புதிய தேர்வு முறையை அமல் செய்தல்

                            அல்லது
*கல்வி வியாபாரத்தை முழுவதுமாகத் தடை செய்து 
  தனியார் பள்ளிகளனைத்தையும் அரசுடைமையாக்குதல்.
மதுக்கடைகளை (TASMAC) நடத்தும் அரசுகளிடம் இதை எதிர்பார்ப்பது எவ்வளவு  பெரிய முட்டாள்தனம்……?
Share:
  • Add to favorites
  • email
  • Facebook
  • Google Bookmarks
  • Google Buzz
  • PDF
  • Twitter
  • Yahoo! Buzz

  தினமணி – எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தின் பகற்கொள்ளை

                                  
                                                                            – மு. சிவகுருநாதன்

தமிழர்களின் கெட்ட காலம், மாற்று இதழுக்கு வேறு வழியின்றி தினமணியை வாங்கிப் படித்தாக வேண்டிய கட்டாயம்.  அதற்காக தினமணியை நம்பகமான  நாளிதழ் என்று யாரும் தவறாக நினைத்து விட வேண்டாம்.  பார்ப்பன தினமலரின் அசிங்கங்களை  ஒப்பிடும்போது தினமணி தேவலாம் என்கிற  நிலைதான்.

எக்ஸ்பிரஸ் – தினமணி குழுமம் இரு நாளிதழ்களுக்கும் சேர்த்து சலுகை ஆண்டு சந்தா என சென்ற ஆண்டு ரூ. 650 என்று நிர்ணயம் செய்திருந்தது.  இவ்வாண்டு ரூ. 950 என சற்று உயர்த்தப்பட்டுள்ளது.  இது தினமணி வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ள சேதிதான்.  ஆனால் இவ்வாறு என்னைப் போல ஆண்டு சந்தா செலுத்தியவர்களிடம் விசாரித்தால் எக்ஸ்பிரஸ் – தினமணி நிர்வாகம் தனது முகவர்களுக்காக அப்பட்டமான பகற்கொள்ளையில் ஈடுபடுவது வெளிச்சத்திற்கு வரும்.

ஒரு கணம் தினமும் தினமணியின் தலையங்கங்களை புரட்டிப் பாருங்கள்.  அவை இவ்வளவு சமூக அக்கறையா என்று நம்மையெல்லாம் புல்லரிக்க வைக்கும்.  தங்களுடைய நிர்வாகத்தின் கீழ் நடக்கும் முகவர்களின் ஏமாற்றுப் பித்தலாட்டங்களை கண்டு கொள்ள மறுக்கும் இவர்கள் ஊருக்கு உபதேசம் சொல்வது நகைப்பிற்கிடமானது.

திருவாரூரில் நான் ஆண்டு சந்தா கொடுக்கும்போது அந்த நண்பர் சேவைக் கட்டணம் (Service Charge) கேட்பார்கள் என்றார்.  அதனால் என்ன? கொடுத்துவிட்டால் போச்சு என்றேன்.  எவ்வளவு என்று கேட்டதற்கு ரூ. 10 அல்லது ரூ. 20 கொடுத்தால் போதுமென்றார்.  என்னுடன் சேர்த்து எனது நண்பருக்கும் சந்தா அளித்தேன்.  மே மாதம் ஒன்றிலிருந்து இதழ்கள் வந்தன.  10 நாட்கள் மட்டும் தொடர்ந்து வந்தது.  பிறகு திடீரென்று இதழ்கள் வரவில்லை.  மறுநாள் ஏனென்று கேட்கும் போது வரவில்லை என்ற ஒரு வார்த்தைதான் பேப்பர் போடும் பையனிடமிருந்து பதிலாக வரும்.  ஆனால் வராத நாளன்று தினமணி – எக்ஸ்பிரஸ் இரண்டும் கடைகளில் விற்பனைக்குக் காத்திருக்கும்.  பணம்  கொடுத்து வாங்கியாகவேண்டும். வேறு வழியில்லை.

நமது தொடர்பு விட்டு விடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ சில நாட்களில் ஒரு இதழ் மட்டும் நமக்கு பிச்சை போடுவார்கள்.  சராசரியாக மாதத்தில் 10 நாட்கள் இரு இதழ்களும் 10 நாட்கள் ஏதேனும் ஒன்றும் வராமற்போவது வாடிக்கை.

அன்று தினமணியோ எக்ஸ்பிரசோ படித்தாக வேண்டும் என்று நமக்கு அரிப்பு ஏற்பட்டால் பேருந்து நிலையம் சென்று பணம் கொடுத்து வாங்கிப் படிக்கலாம்.  பேப்பர் போடுபவரிடம்  வரவில்லை என்பதைத் தவிர வேறு எந்த பதிலும்  வராது.  காலதாமதமாக வந்தால் அடுத்த நாள் கொடுக்கலாமே என்றால் அதுவும் இல்லை.

மாதம் முடிந்த பிறகு சர்வீஸ் சார்ஜ் கேட்ட பேப்பர் போடும் பையனிடம் பேப்பர் போடாத நாட்களின் விவரங்களையும் அதற்குரிய பணத்தில் சேவைக் கட்டணம் போக மீதித் தொகையைத் தருமாறு கேட்டேன்.  பதிலில்லை.  நான் சண்டை போடுவதாக அவர்  முகவரிடம் சொல்லியிருக்க வேண்டும்.

இதழ் கிடைக்கவில்லையா போன் செய்யுங்கள் என செல்போன் மற்றும் தரைவழி இணைப்பு எண்களை தினமணியில் கொடுத்திருப்பார்கள்.  அவர்களுக்குத் தொடர்பு கொண்டு பலமுறை புகார் செய்திருக்கிறேன்.  கடிதம் எழுதியிருக்கிறேன்.  தினமணி நிர்வாகத்தின் எக்ஸிகியூட்டிகள் பெயர், முகவரி எல்லாம் கேட்டு விட்டு போடச் சொல்கிறேன் என்பார்கள்.  மறுபடியும் அதே நிலைதான் நடக்கும்.

ஒரு முறை அவர்கள் சொன்ன செல்போன் எண்ணுக்குப் புகார் செய்து
திரு. வேங்கடராமன்    என்பவருடன் பேசியபோது நீங்கள் சர்வீஸ் சார்ஜ் கொடுக்கவில்லை என்றார்.  எவ்வளவு என்றேன். ரூ. 20 என்றார்.  தினமும்
ரூ. 1/- வீதம் மாதத்திற்கு ரூ. 30 தருகிறேன்.  தினமும் பேப்பர் போடச் சொல்லுங்கள் என்றேன்.  ஒவ்வொரு மாதத்திலும் எத்தனை நாட்கள் பேப்பர் போடவில்லையோ அதற்குரிய தொகையை யார் ஈடு செய்வது என்று கேட்டேன்.  நீங்கள் சண்டையிடுவதாக புகார் உள்ளது என்றார்.  எந்தக் காவல் நிலையத்தில் FIR  பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கேட்டேன்.  இவ்வாறாக நீண்ட விவாதத்தில் அவர் என்னை சர்வீஸ் சார்ஜ் கொடுக்க வலியுறுத்தினாரே தவிர தினமும் பேப்பர் வரும் என இறுதிவரை உறுதியளிக்கவில்லை.

அப்புறம் கொஞ்ச நாள் இதழ்கள் வந்து கொண்டிருந்தது.  சில நாட்கள் இரண்டும் வருவதில்லை.  பல மாதங்களாக ஏதேனும் ஒரு இதழை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தனர். நம் தொடர்பு விட்டு விடக் கூடாது என்பதற்காகவும் ஏதோ பிழைத்துப் போகட்டும் என்றும் இருந்திருப்பார்கள் போலும்.

எனக்கு மட்டுமல்ல என் நண்பருக்கும் இதே கதைதான்.  அவர் சொன்னார்… நமக்காவது பரவாயில்லை. நமது பள்ளிக்கு முழுதாக 100 நாட்கள் கூட இதழ்கள் வரவில்லை.  இந்த ஆண்டு போய்த் தொலைந்து போகட்டும்.  இனிமேல் இவ்வாறு ஏமாற வேண்டாம் என்று அவர் என்னை எச்சரித்தார்.  நானும் எனக்குத் தெரிந்து தினமணிக்கு சந்தா கட்டி ஏமாந்தவர்களிடம் விசாரித்தேன்.  அவர்கள் அனைவரும் சொல்வது, தினமும் இதழ்கள் வருவது குதிரைக் கொம்புதான்.  முகவர்கள் விற்பனையாகாமல் மிச்சமிருந்தால் மட்டுமே நமக்குத் தருவார்கள்.  நிதர்சனம் இதுதான்.  சீட்டுக் கம்பெனிகளிடம் பணம் கொடுத்து ஏமாறுவதில்லையா அதுபோலவே இதையும் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

மே 1 (2011) லிருந்து மார்ச் 31 (2012) வரை இந்தப் போராட்டம் 11 மாதங்கள் தொடர்ந்தது.  ஏப்ரல் 2012 முதல் இதழை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்கள்.  நான் சந்தா கொடுத்த நண்பரிடம் தகவல் தெரிவித்து விட்டு அமைதியானேன்.

இந்நிலையில் 23.04.2012 அன்று எனக்கு அஞ்சலட்டை ஒன்று வந்தது.  சந்தா தொடக்கம் 01.05.2011 முடிவு 30.04.2012 – ரூ. 950 செலுத்தி சந்தாவைப் புதுப்பிக்கவும் என்று சொன்னது அந்தக் கடிதம்.  அதில் அதே செல்போன், போன் எண்கள்.  இதுதான் கோபத்தைக் கிளறிவிட்டு என்னை இங்கு எழுத வைத்தது.

பத்திரிக்கை நடத்துபவர்கள் விற்பனை முகவர்களுக்கு உரிய கமிஷ­ன் கொடுக்க வேண்டியது நியதி.   அது குறைவாக இருந்தால் உயர்த்திக் கொடுக்கப்பட வேண்டும்.  அதற்கு மாறாக சந்தா என்ற பெயரில் தொகை வசூலித்து அவர்களுக்கு இதழ்களைக் கொடுக்காமல் வெளியில் அந்த பிரதிகளை விற்பனை செய்து வருவாய் பார்ப்பதற்கு தினமணி – எக்ஸ்பிரஸ் நிர்வாகம் தனது விற்பனை முகவர்களுக்கு மறைமுக ஏற்பாடு செய்துள்ளது இதன் மூலம் தெரியவருகிறது.  இது மிகப்பெரிய மோசடியாகும்.  தினமணி இந்த மோசடியை நிறுத்தட்டும்.  இல்லையென்றால் பம்மாத்து தலையங்கமாவது எழுதாமல் இருக்கட்டும்.

    இதழின் பழைய விலைகளின் படி நாள் ஒன்றுக்கு ரூ. 6.50 அல்லது ரூ. 8.50; புதிய விலைகளின் படி நாளொன்றுக்கு ரூ. 8.50 அல்லது ரூ. 10.00.   ஓராண்டிற்கு ஒரு சந்தாதாரரிடமிருந்து ரூ. 800 முதல் ரூ. 1000 வரை இதழ்கள் பிடுங்கப்பட்டு வெளியே விற்பனை செய்யப்படுகிறது.   தினமணி நிர்வாகத்திற்கு சந்தாவும் கிடைத்து விட்டது.  முகவர்களுக்கு பணம் கிடைத்தாகி விட்டது.  ஒரு கல்லில் ரெண்டு மாங்காய்.  இந்த முறைகேடான நடைமுறையை நிர்வாகம் கண்டும் காணாமல் இருப்பதன் பின்னணி விளங்கவில்லை.  எனவே இதுவோர் கூட்டுக் கொள்ளை என்று சொன்னால் மிகையில்லை.

மாதத்திற்கு 10 நாட்களுக்கு மேல் பேப்பர் போடாமல் இருக்கும் முகவர் எதிர்பார்க்கும் சேவைக் கட்டணத்தின் நியாயத்தைப் பேசும் நிர்வாகம் சந்தா கட்டியவருக்கு தினமும் பேப்பர் போக வேண்டிய நியாயத்தைப் பற்றி ஏன் பேச மறுக்கிறது?   அரசுப் பள்ளிகளுக்கு போடும் பேப்பர் மூலம் முகவர்கள் பெருங்கொள்ளை அடிக்கின்றனர்.  நிர்வாகம் கண்டு கொள்ள மறுக்கிறது.  அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் (RMSA) இதழ்களுக்கு அளிக்கப்படும் தொகை இவ்வாறு விரயமாவது கூட லஞ்சம் போலத்தான்.

Share:
  • Add to favorites
  • email
  • Facebook
  • Google Bookmarks
  • Google Buzz
  • PDF
  • Twitter
  • Yahoo! Buzz

 சிற்றிதழ் அறிமுகம்: அடவி – 7, ஜனவரி – 2012.

 
 பல்கிப் பெருகும் சிறுபத்திரிக்கை வீச்சு
 
                                            – மு. சிவகுருநாதன்

 இன்றுள்ள நவீன கணினி யுகத்தில் கிடைக்கும் பலதரப்பட்ட வசதிகளைக் கொண்டு பணம் இருந்தால் மட்டும் சிறுபத்திரிக்கைகளைச் செம்மையாக, அழகுற அச்சிட்டு வெளிக் கொண்டு வர முடியும். அவற்றை வாசகர்களின் கையில் சேர்ப்பது, தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் சிக்காமல் மீண்டு வருவது போன்ற பல்வேறு படிகளைத் தாண்டி வர வேண்டியுள்ளது.

திருவண்ணாமலையிலிருந்து தில்லை முரளி ஆசிரியப் பொறுப்பில் அடவி இதழ் 07 ஜனவரி 2012இல் வெளிவந்துள்ளது.  இந்த இதழில் ஜே.பி. சாணக்யா, ஜோஸ் அன்றாயன் ஆகியோரின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.  ஜோஸ் அன்றாயனின் “இங்கு மூத்திரம் கழிக்காதீர்” கதையில் எள்ளல், பகடி சிறப்பாக வந்துள்ளது.

“உலக ஆட்சிக்கான சிவில் சமூகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதே உலக கார்ப்பரேட் மற்றும் அரசுகளின் நிதி உதவி பெற்று இயங்கும் என்.ஜி.ஓக்கள்” (பக்.04) என்று சொல்லும் ஜமாலன் கட்டுரை (மேலே பூதம் கீழே கடல் – சிவில் சமூகமும் அரசு சாரா சமூகமும்) முதலாண்மை நிறுவனங்களின் உலக ஆட்சிச் செயல்பாடுகளை விளக்குகிறது.

“வர்ண – தர்மத்திற்கு அப்பால் சிவில் சமூகம் என்கிற பொதுவெளி சாத்தியமற்ற நிலையில், சிவில் சமூகம் பற்றிய நிறைய பேச்சுகள் சமீப காலங்களில் பெருக்கப்படுகின்றன.  இந்திய சிவில் சமூகத்தில் சாதியத்தின், சாதியக் குழுக்களின் பங்கு என்ன என்பதைத் தீர்க்காமல், சிவில் சமூகம் என்கிற குடியாண்மைச் சமூகத்தை உருவாக்க முடியாது” (பக். 05) என்று கூறும் ஜமாலன்

“காவல்துறை, இராணுவம், நீதி பரிபாலன சட்ட அமைப்பு உள்ளிட்டவற்றைக் கொண்ட வன்முறை சார்ந்த கருவிகளை வெளிப்படையானதாக வைத்து உள்ளது.   குடும்பம், கல்வித்துறை, தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட குடியாண்மைச் சமூகம் கருத்தியல் வழியாக இணக்கமான மனநிலையை உருவாக்குவதாக உள்ளது.  ஓர் அரசமைப்பு வன்முறைக் கருவிகளைக் கொண்டு மட்டுமே ஆள முடியாது, அதிகாரம் செலுத்த முடியாது.  தனது ஆளுகையை ஏற்கக் கூடிய தன்னிலைகளை உருவாக்க வேண்டும்.  அதற்கு இந்த அரசு சாரா, தன்னார்வ, தொண்டு நிறுவனங்கள் பணியாற்றுகின்றன”. (பக். 06) என்றும் கணிக்கிறார்.

“சிவில் சமூகம் என்பது அரசிற்குச் சமமான அதிகாரத்தைப் பெற்றதாக முன் வைக்கப்படுகிறது.  இந்தியாவில் அன்னா ஹசாரேவின் அரசியல் அதைத்தான் முன் வைக்கிறது” என்றும் விளக்குகிறார்.

    பத்தி (தக்கார் தகவிலார்) பகுதியில் வல்வில் ஓரி எந்தச் சாதி? என்ற ஆய்வில் ஈடுபடும் பெருமாள் முருகன், அவன் பெயரிலுள்ள அடைமொழிக்கேற்ப கொங்குப்பகுதி வேட்டுவர்களுக்கு ஓரியின் சாதி என்று கொண்டாட உரிமை உள்ளது என்ற முடிவுக்கு வருகிறார்.

கொல்லிமலையில் ஆண்டுதோறும் வல்வில் ஓரிக்கு அரசு விழா எடுக்கிறது.  இவ்விழாவில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி இழந்து விடுவதால் அதற்குப் பயந்து அவர்களனைவரும் இவ்விழாவைப் புறக்கணித்து விடுகிறார்கள்.  சென்ற ஆண்டு விழாவில் (02.08.2011) கொங்கு இளைஞர் பேரவையின் சட்ட மன்ற உறுப்பினர்

உ. தனியரசு மட்டும் கலந்து கொண்ட செய்தியைச் சொல்லியிருக்கிறார்.  தஞ்சை பெரிய கோயில் குறித்தும் இம்மாதிரியான நம்பிக்கை இருப்பதாலும் அங்கு இதே கதைதான்.  இவர்களைத் திருத்தவே முடியாது.

புரட்சி மனம் கொண்ட அழகுமிக்க பிலடெல்பியப் பெண்ணுக்கும் பாகிஸ்தானியக் கவிஞரான அரசியல் நிபுணருக்கு பிறந்த குழந்தை (டேவிட் கோல்மன் ஹெட்லி – 49) இப்படியொரு தீய மயக்கல்கார, அடிப்படைவாதியாகுமென்று யாரும் கண்டறிந்திருக்க முடியாது. (பக். 14) என்று சொல்லும் கையாளுக்கலை (சிகாகோ நீதிமன்றத்தில் தன் உயிரைக் காக்கும் டேவிட் ஹெட்லி) என்ற ஜுலை 2011 த காரவன் கட்டுரையின் முதல் பகுதி விவரிக்கிறது.  போதை மருந்து கடத்தல்காரனான டேவிட் ஹெட்லியை ஒற்றனாக பயன்படுத்திய அமெரிக்கா தற்போது பயங்கரவாத எதிர்ப்பு முகமூடியை அணிந்து கொள்வது வேடிக்கையானது.

‘மரண தண்டனை சில சிந்தனைகள்’ என்ற கி. பார்த்திபராஜாவின் கட்டுரை (பக். 24) ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்துச் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.   ராஜீவ் கொலையில் வெளிநாட்டுச் சதி கணக்கில் கொள்ளப்படவில்லை என்பதையும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் நடத்தி வரும் நீதிப்போராட்டத்தையும் நமக்கு இக்கட்டுரை நினைவூட்டுகிறது.

மரணத் தண்டனை ஒழிப்புப் போராட்டத்தில் உள்ள பாகுபாடுகளை இக்கட்டுரை வலியுறுத்துவதை ஏற்க முடியாது.  மரண தண்டனையை ஒழிக்கச் சொல்லும்போது அதில் விதி விலக்குகள் ஏற்படுத்துவது நியாயமில்லை.  இந்த மூன்று பேருடன் கூடவே அப்சல் குரு, கஸாப் (நாளை), தர்மபுரி பேருந்து எரிப்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முனியப்பன் உள்ளிட்ட மூவர்  என யாருக்குமே மரணதண்டனை விதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.  நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்கள், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எந்தவொரு தேசிய இன விடுதலை இயக்கங்களின் மரண தண்டனைகளையும் நாம் எதிர்த்தே ஆக வேண்டும்.

வருங்காலத்தில் நரேந்திர மோடி, ராஜபக்சே, கஸாப், வாரன் ஆண்டர்சன் போன்ற எவருக்கும் அவர்கள் செய்த குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கக் கூடாது என்பதே உண்மையான மரண தண்டனை எதிர்ப்பாக இருக்க முடியும்.  இவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்பதற்கு இவர்கள் செய்த குற்றங்களுக்கு வழக்கு தொடுத்து தண்டனை வழங்காமல் தனி விமானத்தில் வெளிநாடு தப்ப உதவி புரியவேண்டும் என்பது பொருளல்ல.

உயிரைப்பறிக்கும் மரணதண்டனைக்கு சட்டத்தில் இடமிருக்கக் கூடாது.  வாழ்நாள் சிறையை விட ஒரு நிமிடத் தூக்குத் தண்டனை உண்மையான தண்டனையாகவோ குற்றங்களை குறைப்பதாகவோ இருக்க முடியாது என்பதே நிதர்சனம்.

திரைப்பகுதியில் தார்க்கோவஸ்கியின் ‘இவானின் குழந்தைப் பருவத்தை’  ஜி. முருகன் அறிமுகம் செய்கிறார். ” பன்னிரண்டு வயதுச் சிறுவனின் ஆன்மாவில் போர் என்ற ராட்சதன் வரைந்த ஒரு காலத்தின் சித்திரம்” இப்படமெனச் சொல்லும் இக்கட்டுரை இப்படத்தின் அனுபவமும், பார்வையும் அந்த்ரே ரூப்ளே படத்திற்கான அஸ்திவாரமாக அமைந்ததையும் வெளிப்படுத்துகிறது.

“எது நடந்ததோ……”  என்ற குறும்படம் குறித்த பதிவு ஒன்று உள்ளது.  இதழ் தொடர்ந்து வெளிவருவது தமிழ்ச் சூழலுக்கு நல்லது.

பக். 48 விலை ரூ. 15  

 தொடர்பு முகவரி: 

 15- மாரியம்மன் கோவில் தெரு,

பவித்திரம் – 606 806,

திருவண்ணாமலை.

 தொலைபேசி: 99948 80005

மின்னஞ்சல்: adavimagazine@gmail.com

Share:
  • Add to favorites
  • email
  • Facebook
  • Google Bookmarks
  • Google Buzz
  • PDF
  • Twitter
  • Yahoo! Buzz

என்னைப் பற்றி...

பன்மை நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு. எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.

வலைப்பதிவு காப்பகம்

Blogroll

புதிய இடுகைகள்

காலண்டர்

May 2012
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

தேடல்

Gallery

சிலைடு ஷோ

Get the Flash Player to see the slideshow.

Blogroll

பக்கக்காட்சிகள்

அரசியல்,சமூக,கலை,இலக்கியப் பதிவுகளுக்கான வெளி.

அரசியல்,சமூக,கலை,இலக்கியப் பதிவுகளுக்கான வெளி.

அரசியல்,சமூக,கலை,இலக்கியப் பதிவுகளுக்கான வெளி.

பக்கங்கள்

தேடு

பிரபலமான இடுகை

டுவிட்டர்